எப்போதும் கரடுமுரடாகவே இருக்கும் இந்திய-பாகிஸ்தான் உறவுப் பாதையில், கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் செய்ததைப் போல பேச்சு வார்த்தைக்கான எந்தவொரு முன்மொழிவும் உற்சாகத்தையும் சந்தேகத்தையும் சம அளவில் ஏற்படுத்தும். ஐக்கிய அரபு அமீரகத்தின் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவுடனான “மூன்று போர்களிலிருந்து பாகிஸ்தான் நிறைய பாடம் கற்றுக் கொண்டுவிட்டது” என்றும் காஷ்மீர் உள்ளிட்ட “அசலான பிரச்னைகளை தீர்க்க முடியுமென்றால் இந்தியாவுடன் அமைதியாக வாழ விரும்புவதாகவும்” அவர் சொன்னார். நாடு கொந்தளிப்பான சூழலில் இருக்கும்போது “காஷ்மீர் போன்ற பற்றியெரியும் பிரச்னைகளை” அவர் தீவிரமாக அணுகுவதாக இந்தியா நினைத்துக் கொண்டிருந்தது என்றார். அரசியல் ரீதியாக இந்த வருடம் தேர்தலை எதிர்கொள்கிறார் திரு.ஷெரீப். முன்னாள் தலைவர் இம்ரான் கானால் வழிநடத்தப்படும் எதிர்கட்சியிடமிருந்து சவாலை எதிர்கொண்டிருக்கிறார் அவர். பொருளாதார ரீதியாக பார்த்தால், கடனை திருப்பிச் செலுத்த முடியாத ஒரு அபாய நிலையில் இருக்கிறது பாகிஸ்தான். ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிப்பதாக உறுதி தந்திருப்பதும் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதோடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் தொகை வரும் என்பதும் ஆறுதல். அதன் ஆப்கானிஸ்தான் எல்லையில் வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலையும் பாகிஸ்தான் எதிர்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருப்பது நட்பு சக்தி என்றாலும், குறிப்பாக தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் போராளிகளோடு மோதல்கள் நடக்கின்றன. இருந்தாலும், ஐ.நாவில் மோதிக் கொண்ட ஒரே மாதத்தில் திரு.ஷெரீபின் அமைதிக்கான வார்த்தைகளை பார்க்கும்போது, பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு இந்தியா காரணமில்லை என்கிற புரிதலோடு ஏதாவது ஒரு வகையிலான உறவு அங்கிருக்கும் அரசுக்கு பயனளிக்கவும் கூடும் என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்கக் கூடும். “பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை” இல்லாத ஒரு சாதகமான சூழல் இருந்தால் இந்தியாவும் “பாகிஸ்தானுடன் இயல்பான அண்டைநாட்டு உறவுகளை” பேண விரும்புவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சொல்லியிருப்பது, இந்தியா அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் திரு.ஷெரீப்பின் முன்மொழிவை நிராகரிக்க விரும்பவில்லை என்பதை சுட்டுகிறது.
திரு.ஷெரீபின் வார்த்தைகள் வந்திருக்கக்கூடிய நேரமும் முக்கியமானது. கோடைக் காலத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை நடத்த இந்தியா தயாராகி வரும் நிலையில், முக்கியமான கூட்டங்களில் பாகிஸ்தான் பங்கேற்பதை உறுதி செய்ய அழைப்புகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்ல உறவு, சுமுகமான பயணத்தை உறுதி செய்யும். ஜி-20க்கு இந்தியா தலைமை வகிக்கும் இந்தக் காலத்தில், யுக்ரைன் போருக்கு மத்தியில் சர்வதேச தெற்கு நாடுகளின் கவலைகளை முன்னிறுத்த விரும்புகிறது இந்தியா. அந்நேரத்தில், அண்டை நாடுகளோடு நிலவும் அமைதியால் நற்பயன் கிட்டும். ஒரு தாக்கத்தை ஏற்படுத்த மட்டுமே திரு.ஷெரீப் அப்படி பேசினாரா அல்லது உண்மையிலேயே பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஷாங்காய் உச்சிமாநாட்டுக்கான அழைப்பை ஏற்றுக் கொள்வதன் மூலமாகவோ அல்லது 2019லிருந்து தூதர்கள் இல்லாத நிலையில் இரு நாடுகளின் தலைநகரங்களில் தூதரகத்தை மீண்டும் தொடங்கும் முன்மொழிவு மூலமோ பாகிஸ்தான் இதைத் தொடர விரும்பினால், இந்தியாவும் அதற்கு நல்ல எதிர்வினையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா மற்றும் யுக்ரைனுக்கு இடையில் “பேச்சுவார்த்தை மற்றும் வியூகங்கள்” பற்றி அரசு அறிவுறுத்திவருகிறது. அதேபோல, ‘யதார்த்தவாத’ நோக்கிலிருந்து தாலிபானுடனும் பேசி வருகிறது. இந்த தருணத்தில் தன் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தக்கூடிய ஒரு வாய்ப்பை - குறிப்பாக ஒரு ராஜதந்திரியாக இந்தியாவின் பங்கு முன்னிலைப்படுத்தப்படும் ஒரு வருடத்தில் - மறுப்பது முரணாக இருக்கும்.
This editorial has been translated from English, which can be read here.