ஜோஷிமத்தில் ஏற்பட்டுள்ள நிலம் உள்வாங்கும் சம்பவமானது, இந்தியா முழுவதும் வளங்களை தோண்டியெடுக்கும் மிகப்பெரிய திட்டங்களின் அருகில் அரங்கேறி வரும் புவியியல் பேரழிவு நிகழ்வுகளின் அடையாளமாக மாறியிருக்கிறது. ஜாரியா, புர்குண்டா, கபசரா, ராணிகஞ்ச் மற்றும் தல்சர் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலம் சரிந்து வருவதாக தகவல்கள் வருகின்றன. தில்லி மற்றும் கொல்கத்தாவில் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதாலும் மெஹ்சானாவிலிருந்து ஹைட்ரோ கார்பன்களை எடுப்பதாலும் இது நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வருடம் இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் ஒரு நீர்மின் திட்டத்துக்கான சோதனை ஓட்டங்கள் தொடங்கிய பிறகு நிலம் சரிய தொடங்கியிருந்தது. இந்த நிகழ்வுகள், உத்திராகண்டில் ஜோஷிமத்தின் அருகில் உள்ள தபோவன் விஷ்ணுகாட் நிறுவனத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்த கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது. 2010ல் ஜோஷிமத்துக்கு அருகே சுரங்கப் பாதை துளையிடும் கருவி ஒன்று நிலத்தடி நீர் நிலையை மூடியதன் காரணமாக சில மாதங்கள் கழித்து குறிப்பிடத்தக்க அளவில் நீர் வெளியேறியது. இதற்கு பின்னர் இது பற்றி கரண்ட் சயின்ஸ் இதழில் எழுதிய இரு ஆய்வாளர்கள் “திடீரென்ற, மிகப்பெரிய அளவில் நீரை அகற்றுவது அந்த பகுதியில் நிலச்சரிவை தூண்டும்” சாத்தியத்தை கொண்டிருப்பதாக எழுதினார்கள். இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கும் 2009ல் நிலத்தடி நீர்நிலையில் ஏற்பட்ட துளையுடன் நேரடி தொடர்பு இருக்கிறதா என்று முடிவு செய்வது சிக்கலானது. காரணம், இப்பகுதியில் நீண்டகால அளவில் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் இல்லை. ஜனவரி 5ஆம் தேதியன்று, தபோவன் விஷ்ணுகாட் திட்டமும் சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியான ஹெலாங்-மார்வாரி புறவழிச் சாலையும்தான் பிரச்னைக்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டத் தொடங்கியவுடன், இந்த நெருக்கடிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லி ஜனவரி 5 ஆம் தேதி தேசிய அனல் மின் கழகம் ஒரு அறிக்கையை வெளிட்டது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஜனவரி 10ஆம் தேதி நிலச்சரிவுக்கான சூழ்நிலைகளை ஆராய தொடங்கினார்கள். குழுவின் கண்டறியும் முடிவுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும். அது கட்டுமானப் பணிகளை நிறுத்தச் சொன்னாலும் கூட அதை செய்ய வேண்டும். அரசு அணைகளை தொடர்ந்து கட்டுவதை மட்டுப்படுத்துமாறு பல சந்தர்ப்பங்களில் நிபுணர்களும் சிவில் சமூகமும் சொல்லி வந்திருக்கிறார்கள். குறிப்பாக சமீப காலங்களில் வடக்கு மற்றும் வடக்கிழக்கில் உள்ள நதிகளின் மீது நிறைய அணைகள் கட்டப்பட்டு வந்திருக்கின்றன. அந்த பிராந்தியங்களில் சுற்றுலாவை நீடித்தத்தன்மை கொண்ட ஒன்றாக வைத்திருக்க அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் சாலைகளை விரிவுப்படுத்த நிலையற்ற மலைப்பகுதிகளை தகர்க்கக்கூடாது என்றும் சொல்லி வந்திருக்கிறார்கள். அய்சால் நகரில் ஜூலை மாதம் பெய்த பலத்த மழை, நிலத்தை உள்வாங்கச் செய்தது. அது மண்டல அளவில் சட்ட அமலாக்கம் மோசமாக இருப்பதையும் பிராந்தியத்தின் சுமக்கும் திறன் பற்றி கவலைக் கொள்ளாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டியது. ஆனால் நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழும் ஜோஷிமத்தில், மண்டல அளவில் ஆய்வு, சுமக்கும் திறன், உச்சகட்ட தாங்குதிறன் குறித்த கேள்விகள் அனைத்தும் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. யாத்ரீகர்களும் சுற்றுலாப் பயணிகளும் வரும் இடமாக இருப்பதால் ஜோஷிமத்தில் ஏற்பட்டு வரும் நிலப்புதைவு தேசத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆனால், இது முதல் நிகழ்வோ, மிக மோசமான நிகழ்வோ இல்லை. ஜோஷிமத்தில் இப்போது அரசு மேற்கொண்டு வரும் பழுது பார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளை பிற எல்லா இடங்களிலும் மேற்கொள்ள வேண்டும். இறுதியாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவியலுக்கும், சுரங்கங்களுக்கும் அணைகளுக்கும் அருகில் வசிக்கும் மக்களுக்கும் செவிமடுக்க வேண்டும். கார்பன்-நடுநிலை நாடாக மாறுவதற்கு முன்பு பொருளாதார ரீதியாக இன்னும் வளார்ந்து வரும் நாடுகளை அதிகமான உமிழ்வுகளை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்று ஒரு வாதம் உள்ளது. ஆனால், காலநிலை மாற்ற நீதியில் சமரசம் செய்துக் கொண்டு இயற்கை வளங்களை சூறையாடுவதற்கான இலவச அனுமதி இல்லை அது.
This editorial has been translated from English, which can be read here.