இயல்பான ஒரு சூழலில், சமீபத்தில் வெளியான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள், கொண்டாட்டத்துக்கான ஒரு காரணமாக இருக்க வேண்டும். காரணம், முதல் காலாண்டின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை அவை காட்டியிருக்கின்றன. ஆனால், கடந்த வருட ஏப்ரல்-ஜூன் கால கட்டத்திலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி பற்றி தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் கணிப்பு 13.5 சதவிகிதத்தில் இருப்பது, இந்த வருடம் ஜூன் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கணித்த 16.2 சதவிகிதத்தை விட கவலையளிக்கும் விதத்தில் குறைவாக இருக்கிறது. இன்னும் நிலையான அடித்தளத்தை தேடும் ஒரு பொருளாதாரத்தை அது குறிக்கிறது. சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறிகளுக்கும் உக்ரெயின் போர் போன்ற சிக்கலகளுக்கும் இடையில் முதல் காலாண்டின் ஏமாற்றமளிக்கும் நகர்வு, பொருளாதாரத்தை இன்னும் ஆழமில்லாத வளர்ச்சிப் பாதையில் வைத்துவிடும். கூடவே, ஏற்றுக் கொள்ளத்தக்கதைவிட அதிகமாக உள்ள பண வீக்கம் நுகர்வோரின் நம்பிக்கையையும் வலுவிழக்கச் செய்துவிடும்.
மொத்த மதிப்பு சேர்ப்பை (Gross Value Added) வழங்கும் எட்டு துறைகளின் உற்பத்தியை பார்க்கும் போது எல்லா துறைகளும் ஆண்டுதோறும் வளர்ந்தாலும் – பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பிற துறைகள் 26.3 சதவிகித வளர்ச்சியை அடைந்திருந்தன – எட்டில் ஆறு துறைகள் தொடர்ச்சியான சறுக்கல்களையே சந்தித்தன. இரண்டு சேவைத் துறைகள் மட்டுமே – மின்சாரம், எரிவாயு, தண்ணீர் மற்றும் பிற சேவைகள், மற்றும் நிதி, தொழில்சார் துறைகள் மட்டும் ஜனவரி-மார்ச் காலாண்டில் விரிவாக்கத்தை பதிவு செய்திருந்தன. முறையே 12.6 சதவிகிதமும் 23.7 சதவிகிதமும் அவை வளர்ந்திருந்தன. வேளாண்மை, உற்பத்தி, கட்டுமானம், ஆட்கள் தொடர்பு முக்கியமானதாக இருக்கும் தொழில்கள், ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்து துறை ஆகியவை ஒவ்வொரு காலாண்டிலும் சரிவுகளையே சந்தித்தன. முறையே 13.3 சதவிகிதம், 10.5 சதவிகிதம், 22.3 சதவிகிதம் மற்றும் 24.6 சதவிகிதம் சரிவை அவை சந்தித்தன.
தேவைகளைப் பொறுத்தவரை, ஏமாற்றுவதற்கென்றே நம்பிக்கையளிப்பது போல தோன்றியது. பொருளாதாரத்தின் அரணாக கருதப்படும் தனி நபர் இறுதி நுகர்வு, ஆண்டு தோறும் 25.9 சதவிகிதம் விரிவாவதன் மூலம் புத்தாக்கம் பெற்றுவிட்டது போலவே தோன்றியது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு 60 சதவிகிதத்துக்கும் கொஞ்சமே குறைவாக இருக்குமளவுக்கு முன்னேற்றம் கண்டது. ஆனால் தொடர்ச்சியாக வைத்து பார்க்கும் போது ஏப்ரல்-ஜூன் 2022ல் மதிப்பிடப்பட்ட 22.08 லட்சம் கோடி தனி நபர் நுகர்வு, அதற்கு முந்தைய காலாண்டின் தனி நபர் நுகர்வை விட குறிப்பிடத்தகுந்த அளவில் 2.4 சதவிகிதம் அல்லது 54000 கோடி ரூபாய் குறைவாகவே இருந்தது. தனி நபர் முதலீட்டுக்கு பதிலாக கருதப்பட்ட அரசு செலவு மற்றும் மொத்த நிலையான முதலீடு உருவாக்கம் காலாண்டுக்கு காலாண்டு முறையே 10.4 சதவிகிதம் மற்றும் 6.8 சதவிகிதம் குறைந்து, மொத்த உற்பத்தியையும் கூட குறைத்துக் காட்டியது.
தொடர்ச்சியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.6 சதவிகிதம் குறைந்திருக்கிறது என்பது கொள்கைகளை வகுப்பவர்களுக்கு கவலையளிக்க வேண்டும். இந்த வருட பருவகாலத்தில் மழை ஒழுங்கற்ற முறையில் பெய்ததன் காரணமாக சில பகுதிகளில் மோசமான வெள்ளமும் வட மற்றும் கிழக்கு இந்தியாவில் பயிர்களுக்கு போதுமான ஈரப்பதம் இல்லாத நிலையையும் உருவாக்கியிருப்பதன் காரணத்தால், ஊரகப் பகுதிகளில் வேளாண் உற்பத்தி மற்றும் நுகர்வோர் செலவை பாதிக்கும். வளர்ந்த பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் நடக்கும் மந்த நிலை காரணமாக சர்வதேச வர்த்தகமும் தணிந்திருக்கும் நிலையில், டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு சரிந்திருந்தாலும்கூட இந்தியாவின் வணிக ஏற்றுமதிகள் வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும். இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் குறைப்பதில் தனது முழு கவனத்தை செலுத்த வேண்டிய சூழலில், நுகர்வையும் முதலீட்டையும் ஊக்குவிக்கும் பொறுப்பு நிதித் துறையிடமே இருக்கிறது.
This editorial in Tamil has been translated from the English which can be read here.