வர்த்தக காற்று

தடுமாறிக்கொண்டிருக்கும் மேற்கத்திய பொருளாதாரங்களின் மோசமான விளைவுகள் இன்னும் இந்திய ஏற்றுமதியை பாதிக்கத் துவங்கவில்லை.

January 21, 2023 11:46 am | Updated 11:46 am IST

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2022ஆம் ஆண்டின் டிசம்பரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியிருந்தது. 34.5 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருட்கள் ஏற்றுமதியாயின என்றாலும், இது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததைவிட 12.2 சதவீதம் குறைவு. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், ஏற்றுமதி குறைவது கடந்த மூன்று மாதங்களில் இது இரண்டாவது முறை. உலகளாவிய போக்குகள் இந்திய வர்த்தகத்திற்குச் சவாலாக இருப்பதே இதற்குக் காரணம் என்று கூறி, வர்த்தக அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சமாதானம் சொல்ல முயற்சிக்கிறார்கள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலவிவரும் மந்தநிலை, சீனாவில் உள்ள கோவிட்-19 பரவல், பல நாடுகளில் தங்கள் சந்தையைப் பாதுகாக்கும் போக்கு ஆரம்பித்திருப்பது போன்ற பல காரணங்கள் இதற்குச் சொல்லப்படுகின்றன. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் டிசம்பரில் ஏற்றுமதி வீழ்ந்திருப்பதாகத் தெரிவதற்கு, முந்தைய ஆண்டில் அதிக அளவு ஏற்றுமதி நடந்ததும் ஒரு காரணம். 2021-22ஆம் ஆண்டைப் பொறு்ததவரை, டிசம்பர் 2021ல் இரண்டாவது அதிக அளவு ஏற்றுமதி நடந்தது. 39.3 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதியாயின. அந்த ஆண்டில் இந்தியாவில் பொருட்களின் ஏற்றுமதி 422 பில்லியன் டாலர்களைத் தொட்டது. இதற்குப் பிறகு உலகின் வர்த்தக இயங்குநிலை மாறியது. பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்பு ஏற்பட்ட வலுவான வளர்ச்சியிலிருந்து தடுமாற்றம் நிறைந்த வளர்ச்சிப்பாதையை நோக்கி வர்த்தகம் திரும்பியது. அதிகரித்த பணவீக்க விகிதம், யுக்ரைன்-ரஷ்ய யுத்தத்தால் ஏற்பட்ட புவிசார் அரசியல் குழப்பங்கள் என 2022ல் உலகப் பொருளாதாரம் பல அதிர்ச்சிகளை எதிர்கொண்டது.

இந்தக் கொந்தளிப்பான காலகட்டத்தில், ஏற்றுமதிப் போக்குகளை மாதம்தோறும் கண்காணிப்பது நிலைமையை அளவிடச் சிறந்த வழியாக இருக்கும். இப்போதைக்குப் பார்க்கும்போது, பண்டிகைக்கால விடுமுறைக்கு முந்தைய கடைசிக் கட்ட ஏற்றுமதிகள் இலக்கைச் சென்றடைந்திருப்பதால் டிசம்பர் மாத ஏற்றுமதி அளவு உயர்ந்திருப்பதாக வைத்துக்கொண்டாலும்கூட, அக்டோபர் - நவம்பர் மாத ஆரம்பகட்ட வர்த்தக கணிப்புகளோடு ஒப்பிட்டால் நன்றாகவே இருக்கிறது. 2020 நவம்பருக்குப் பிறகு முதல் முறையாக இந்த டிசம்பரில் 3.5 சதவீத அளவுக்கு ஏற்றுமதி குறைந்தாலும் 58.2 பில்லியன் டாலர் ஏற்ற அளவில் நீடிப்பதும் நம்பிக்கை தருகிறது. 2022-23ன் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டால் 9.1 சதவீதம் அதிகமாகவே இருக்கிறது. 2022 நவம்பர் வரை இது 11.1 சதவீத அளவுக்கு இருந்தது. உலக அளவில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலை, இந்தியப் பொருட்களுக்கான தேவையை இந்தக் காலாண்டில் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அதனால், இந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவே சரிவைச் சந்திக்கும் என்றும் சில அமைப்புகள் எதிர்பார்க்கின்றன. முக்கியமான ஏற்றுமதிச் சந்தைகளில் நிறுவனங்கள் தடுமாறிவருவதால், எஸ்&பி குளோபல் இந்தியா மேனுஃபேக்சரிங் பர்சேசிங் மேனேஜர் புள்ளிவிவரப் பட்டியலின்படி கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்த டிசம்பரில் புதிய ஏற்றுமதி ஆர்டர்களின் வளர்ச்சி மிக மெதுவாக இருக்கிறது. அமெரிக்காவில் சில்லரை விற்பனை குறித்த சமீபத்திய புள்ளிவிவரத்தைப் பார்த்தால், கடந்த 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு தீவிர மந்த நிலை இருப்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. தொழிற்சாலை உற்பத்திகள் தேங்கிப்போயிருக்கின்றன. ஆகவே இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதி இலக்கான அமெரிக்காவில் முழுமையாக தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கும் மூலப் பொருட்களுக்குமான தேவை குறையும். சீனச் சந்தை மறுபடி திறக்கப்படும் நிலையில், தேவை குறைந்திருந்தாலும் போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி விலக்குத் திட்டத்தில் இருந்த சில குளறுபடிகளைச் சரிசெய்திருப்பது, இரும்புத் தாது ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியிருப்பது போன்ற அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் ஓரளவுக்கு உதவும். ஆனால், ஏற்றுமதி தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டுமானால், பரந்த அளவிலான நடவடிக்கைகளும் துரிதமான நுண்ணிய கொள்கை மாற்றங்களும் தேவைப்படும்.

This editorial was translated from English, which can be read here.

0 / 0
Sign in to unlock member-only benefits!
  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products
Sign in

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.