மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன், பொதுத் தேர்தலுக்கு ஒரு வருடமே இருக்கும் நிலையில் மாலத்தீவில் குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பது, பிபிஎம்-பிஎன்சி எதிர்க்கட்சி கூட்டணியை வழிநடத்துவதற்கான அவரது திட்டங்களை பாதிக்கும். 2013 முதல் 2018 வரை அவர் அதிபராக இருந்த காலத்தில் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நிறுவனத்துடன் ஊழல் மற்றும் பணமோசடி தொடர்புகள் இருப்பதாக நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் குற்றசாட்டுகளில் தண்டிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சிறை தண்டனை பெறும் எந்த வேட்பாளரையும் மாலத்தீவு அரசியல் சாசனம் தகுதி நீக்கம் செய்கிறது. அவர்கள் பின்னர் குற்றசாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டால் அல்லது அவர்களது விடுதலைக்கு பின் மூன்றாண்டுகள் கழிந்த பிறகே அவர் மீண்டும் தகுதி பெற முடியும். ஒரு விதத்தில், வரலாறு திரு. யாமீனைப் பொருத்தவரையில் முழுமையாகியிருக்கிறது. அவருக்கு முன் பதவியில் இருந்த முகமது நஷீத் மீது வழக்கு தொடுத்ததுடன், அவரது கட்சியைச் சேர்ந்த இபு சோலிஹ்வுக்கு ஆதரவாக திரு. நஷீத் பதவி விலகுவதையும் யாமீன் உறுதி செய்தார். மூன்று வழக்குகளில் அவருக்கு வழங்கப்பட்ட இரண்டாவது தண்டனை இது. மாலத் தீவில் அவசரநிலையை அறிவித்த அவரது பதவிக்காலத்தில் திரு. யாமீனுக்கு இந்தியாவுடன் ஒரு மோசமான உறவே இருந்தது. எதிர்கட்சித் தலைவராக அவர் “இந்தியா வெளியேறு” பிரச்சாரத்தை முன்னெடுத்தார். தவிர, சமீபத்திய தீர்ப்புக்கு பிறகும் மனம் திருந்தாமல் அவரது சிறைவாசத்தை இந்தியாவின் அழுத்தத்துடன் இணைக்க முயற்சிக்கிறார். இந்த மோசமான உறவு மற்றும் திரு. யாமீனின் சீனாவுடனான கடந்த கால நெருக்கமான தொடர்புகளை வைத்துப்பார்க்கும்போது, அவரது தகுதி நீக்கத்துக்கான வாய்ப்பு, இந்தியாவின் பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் வசிக்கும் சவுத் பிளாக்கிற்கு சற்று நிம்மதியை தரலாம். ஆனால் கடல் சார்ந்த அண்டை நாட்டில் நிலவும் உள்நாட்டு அரசியல் என்று வரும்போது அரசு கவனமாக
கையாள வேண்டும். இந்தியாவின் உள்கட்டமைப்பு உதவி, கடன் இணைப்புகள், கடன்கள் மற்றும் பல்வேறு திட்டங்கள் (கிரேட்டர் மாலே இணைப்பு திட்டம், ஹனிமாது விமான நிலையம், ஹுல்ஹுமலை கிரிக்கெட் மைதானம், குல்ஹிபால்ஹு துறைமுகம்) ஆகியவை காரணமாக, இந்தியாவின் இருப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. கூடுதலாக, 2018 முதல் இருக்கும் நெருங்கிய உறவுகள், உயர்மட்ட இராணுவ பரிமாற்றங்கள் காரணமாக, இந்தியா அங்கு ஒரு தளத்தை உருவாக்க முயல்கிறது என்பது போன்ற ஊகங்களும் எழுந்திருக்கின்றன. திரு. யாமீனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுப்பதிலும், “இந்தியா வெளியேறு” பிரச்சாரத்தைக் கண்டிப்பதிலும் இந்திய தூதரகத்துக்கு எதிராக வன்முறையான மிரட்டலை விடுத்ததற்காக மூத்த எதிர்க்கட்சித் தலைவரைக் கைதுசெய்வதிலும் சோலிஹ் அரசாங்கம் உடனடியாக செயல்பட்டு வந்தாலும் கூட, இந்த போராட்டங்கள் நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு கவனத்தை ஈர்த்துள்ளன. அடுத்த தேர்தலில் திரு. யாமீன் போட்டியிட அனுமதியில்லை என்றாலும், இது எதிர்க்கட்சி கூட்டணியில் இன்னும் தீவிர சக்திகளுக்கு இடமளிக்கக்கூடும். இந்த நிலையில் மாலத் தீவு அரசியல் மீது இந்திய உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும். அங்குள்ள இந்தியாவின் நெருங்கிய நண்பர்களான அதிபர் சோலிஹ் மற்றும் முன்னாள் அதிபர் நஷீத் ஆகியோருக்கு இடையிலான பிளவு, ஆளும் மாலத் தீவு ஜனநாயகக் கட்சியை பிளவுபடுத்த அச்சுறுத்தும் நிலையில் அதையும் உள்ளடக்கியே இந்த கண்காணிப்பு இருக்க வேண்டும். இந்த அரசியலில் வெளிப்படையான சார்புகள் இருந்த போதிலும், அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தேர்தலில் எந்த திசையிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்காமல் நட்புரீதியான உதவிகரமான அண்டை நாடு என்கிற பிம்பத்தை இந்தியா தீவிரமாக முன்வைக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.