பரந்து வரும் சமூக பழக்க வழக்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் இன்னொரு முயற்சியாக, ஒரு சிறப்பு சட்டத்தின் கீழ் ஓர் பால் திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்னும் கோரிக்கைகளுக்கு அரசின் பதிலை கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஓர் பால் திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது, ஒர் பாலீர்ப்பு/இரு பாலீர்ப்பு/மாற்றுப் பாலினத்தவர்/ஊடுபால், பால்புதுமையினர்/அல்பாலீர்ப்பு கொண்டவர்களின் உரிமைகளை மறுக்கும் பாகுபாடு என்று சொல்லும் இரு தம்பதியின் வழக்கை விசாரிக்க ஒப்புக் கொண்டிருக்கிறது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோரை கொண்ட அமர்வு. தங்களது தனிப்பட்ட சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள முடியாத தம்பதிகளுக்கு சிவில் திருமணங்களை ஒரு வாய்ப்பாக வழங்கும் 1954 சிறப்பு திருமணச் சட்டத்தை மனுதாரர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட்டதோடு, பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள பல வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தனக்கு மாற்றிக் கொண்டது.அமெரிக்கா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் சட்டப்பூர்வமாக இருக்கும் ஓர் பால் திருமணத்தை அங்கீகரிக்கும் நடவடிக்கையின் முதல் படி இது. இந்த வருடம் ஜூலை மாதம்தான் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை அத்தகைய திருமணங்களை பாதுகாப்பதற்கான சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தது. கருக்கலைப்பு உரிமைகள் தொடர்பாக ரோ எதிர் வேட் வழக்கை தலைகீழாக மாற்றிய பிறகு, விடாப்பிடியாக இருக்கும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட சட்டங்களை மறு பரிசீலனை செய்யக் கூடும் என்கிற கவலைக்கிடையிலேயே இந்த சட்டப்பூர்வ நடவடிக்கை வந்திருக்கிறது. தனியுரிமைக்கான உரிமையை உறுதிப்படுத்திய கே.எஸ்.புட்டசாமி (2017) தீர்ப்புக்கு பிறகும், ஓர் பாலீர்ப்பை குற்றமில்லை என்று சொன்ன நவ்தே சிங் ஜோஹர் (2018) தீர்ப்புக்கு பிறகும் ஓர் பால் திருமணங்கள் தொடரும் என்கிற நம்பிக்கை உருவானது. ஆனால் அப்படி நிகழவில்லை. நீதிமன்றங்களிலும் வெளியிலும், ஓர் பால் திருமணங்களை மத்திய அரசு எதிர்த்தே வந்திருக்கிறது. நீதித்துறையின் தலையீடு ‘தனிப்பட்ட சட்டங்களின் நுட்பமான சமன் நிலையில் முழுமையான ஒரு அழிவை’ கொண்டு வரும் எனவும் அது கூறியிருந்தது.
இதன் காரணமாக கூட, இந்து திருமணச் சட்டம் போன்ற தனிப்பட்ட சட்டங்களின் கீழ் பரிசீலிக்காமல் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் ஓர் பால் திருமணங்களை அனுமதிப்பதை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க நினைத்திருக்கலாம். கடந்த சில வருடங்களாகவே, பழமைவாத சமூகத்திற்கு சவால் விடும் தொடர்ச்சியான தீர்ப்புகளை வழங்கி நம்பிக்கையை அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். பழங்கால சமூக நெறிமுறைகளுக்கு இணங்காத மக்களுக்கான வாய்ப்பையும் விரிவுப்படுத்திருக்கிறது. எப்படியும் ஒரு வழியாக, நீதிமன்றம் சாதகமாக முடிவெடுத்திருந்தாலும், ஒர் பாலீர்ப்பு/இரு பாலீர்ப்பு/மாற்றுப் பாலினத்தவர்/ஊடுபால், பால்புதுமையினர்/அல்பாலீர்ப்பு கொண்ட சமூகத்தினரின் சமத்துவத்தை நோக்கிய பாதை நீண்டதாகவும் கடினமானதாகவும்தான் இருக்கும். பற்பல வழக்கங்களையும் மரபுகளையும் உடைய பன்முகம் கொண்ட நாட்டில் ஓர் பால் திருமணம் போன்ற ஒன்றை நடைமுறைப்படுத்துவது எளிதாக இருக்காது. சமூக மனநிலைகள் பழமையில் ஊறியதாகவே இன்னும் இருக்கின்றன. வேறுபட்டு இருப்பதாக உணர்பவர்கள், தொடர்ந்து களங்கப்படுத்தப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள் மற்றும் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். நீதிமன்றத்துடன் இணைந்து, சமூக அளவிலும் பாலியல், பாலினம், பெண்கள் மற்றும் ஒர் பாலீர்ப்பு/இரு பாலீர்ப்பு/மாற்றுப் பாலினத்தவர்/ஊடுபால், பால்புதுமையினர்/அல்பாலீர்ப்பு சமூகத்தினர் பற்றிய பழமைவாத கருத்துகளை அகற்ற சமூக அளவில் நிறைய செய்ய வேண்டும். ஓர் பால் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன், பாரம்பரிய திருமணத்தின் நன்மைகளையும் ஓர் பால் தம்பதிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் செயற்பாட்டாளர்கள் கோரி வருகிறார்கள். குழந்தைகளை தத்தெடுப்பது போன்ற உரிமைகளுக்காகவும் அவர்கள் பேசுகிறார்கள். மனிதர்களுக்கிடையிலான உறவுகளின் தன்மை மாறி, சமூகம் மாற்றம் அடையும் போது, சுதந்திரம் மற்றும் விடுதலைகளின் அரசியலமைப்பு உரிமைகள் ஓர் பால் தம்பதியினரின் வாழ்க்கை உள்ளிட்ட எல்லா வெளிகளுக்கும் விரிவாக்கப்பட வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE