பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த பிறகு, டி.எம்.எச் -11 அல்லது தாரா கடுகு கலப்பினம் -11ஐச் சுற்றி ஒரு நம்பிக்கை எழுந்திருக்கிறது. பொது நிதியைப் பயன்படுத்தி மரபணு பொறியியல் நுட்பங்களின் மூலம் இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வகை இது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தலைமை கட்டுப்பாட்டாளரும் அமைச்சகத்தின் ஒரு அங்கமுமான மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (ஜி.இ.ஏ.சி) கடந்த வாரம் இந்த வகைக்கான சுற்றுச்சூழல் வெளியீட்டிற்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் விதைகளை அதன் மேலதிக உற்பத்திக்காக வயல்களில் பயிரிடலாம். வணிக ரீதியான வெளியீட்டிற்கு ஒப்புதல் பெறுவதற்கு முந்தைய நிலை இது. சுய மகரந்த சேர்க்கை தாவரமான கடுகை பிற வகைகளோடு கலப்பு செய்வதற்கு இணக்கமானதாகவும் கலப்பின வகைகளை உருவாக்கும் வகையிலும் மண் பாக்டீரியத்திலிருந்து வரும் மரபணுக்களைப் பயன்படுத்துகிறது டி.எம்.எச்-11. கலப்பின வகைகள் பொதுவாக மிகவும் வீரியமானவை. கடுகைப் பொருத்தவரையில் அது ஒரு எண்ணெய் விதை என்பதால் அதிக எண்ணெயை உற்பத்தி செய்யும். கடுகு வகைகள் பல இருந்தபோதிலும், மோசமான மகசூல் காரணமாக இந்தியா நிகர எண்ணெய் இறக்குமதியாளராகவே தொடர்ந்து நீடித்து வருகிறது. யுக்ரைன் யுத்தத்தின் காரணமாக உணவு நெருக்கடிப் பிரச்னை இன்னும் மோசமாகதான் ஆகியிருக்கிறது. பல பத்தாண்டுகளாக சோதனை முயற்சிகள் நடந்து கொண்டிருந்த போதிலும், மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை செயற்பாட்டாளர்கள் எதிர்த்ததன் காரணமாகவும், அவை ஆபத்தானவை என்று சில விவசாயக் குழுக்கள் நம்பியதன் காரணமாகவும் கலப்பின வகை கடுகுகள் விவசாயிகளை வந்தடையவில்லை.
பல முக்கியமான அறிவியலாளர்களும் வேளாண் வல்லுனர்களும் ஜி.இ.ஏ.சி ஒப்புதலை உற்சாகமாக வரவேற்றிருந்தாலும், இந்த கொண்டாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். 2017லும் ஜி.இ.ஏ.சி இந்த விதைக்கு ஒப்புதல் வழங்கியிருந்தது. ஆனால் போராட்டங்களுக்கு பிறகு மேலதிக சோதனைகளை அறிமுகப்படுத்துவதாகச் சொல்லி பின்வாங்கியது. 2009ல், ஜி.இ.ஏ.சி, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிரான பிடி கத்திரிக்காய்க்கு ஒப்புதல் வழங்கியது. ஆனால் மீண்டும் போராட்டங்களுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அந்த ஒப்புதல் பின்வாங்கப்பட்டது. விவசாயம், மாநில அரசின் கீழ் வரும் விஷயமாக இருப்பதால், ஒரு விதைக்கு வணிகரீதியான ஒப்புதல் வழங்கப்படுவதற்கு முன்பு அரசியல் ரீதியாக இது சரிவருமா என்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். ஆனால் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில், இப்படி முடிவெடுப்பது தொழில்நுட்பரீதியிலான முன்னேற்றத்தை தடுக்கவே செய்திருக்கிறது. பிடி கத்திரிக்காய் மீதான தடை அல்லது ‘ஒத்திவைப்பு’ என்று சொல்லப்படுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 2020ல்தான் மீண்டும் ஜி.இ.ஏ.சி புதிய களச் சோதனைகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இவையும் முன்பே செய்யப்பட்ட அதே சோதனைகள்தான். அடுத்த சில ஆண்டுகளில் இவை கிடைக்குமா என்பது தெளிவில்லை. டி.எம்.எச்-11ல் பயன்படுத்தப்படும் பர்னேஸ்-பார்ஸ்டார் முறை, நம்பிக்கைக்குரியது என்றாலும் CRISPR போன்ற ஒரு அதிநவீன செயல்முறை வந்துவிட்ட நிலையில் காலாவதியாகிவிட்ட முறைதான். இந்தியாவின் சமையல் எண்ணை நெருக்கடிக்கு டி.எம்.எச்-11 மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது. மாறாக, விதை நிறுவனங்கள் முதலீடு செய்து தங்களது சொந்த கலப்பினங்களை உருவாக்குவதற்கான ஒரு தொழிநுட்ப தளத்தை மட்டுமே அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால் விதை வளர்ச்சி தொடர்பான ஒழுங்குமுறைக் கொள்கையைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை இதைத் தடுக்கிறது. மாற்றத்தை கொண்டு வருவதை அரசு அறிவிக்க வேண்டுமென்றால், ஜி.இ.ஏ.சியின் ஒப்புதலை அங்கீகரிக்க வேண்டும். தவிர, அரசியல் ரீதியான கவலைகளுக்குப் பதிலாக அறிவியல் ரீதியான பரிசோதனைகள்தான் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் ஒரு பொருள் வழங்கப்படுவதை தீர்மானிக்கின்றன என்கிற முறையை மீட்டெடுக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.