சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில், அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தால் ((Press Information Bureau)) உண்மையா என சரிபார்க்கப்பட்டு, தவறான செய்தி என்று முடிவு செய்யப்பட்ட உள்ளடக்கங்களை சமூக ஊடக தளங்கள் அகற்ற வேண்டும் என்று நிர்பந்திக்க முயற்சிக்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவையின் முன்மொழிவை இரண்டாவது பார்வைகூட இல்லாமல் எதிர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப விதிகளில் முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தத்தின் காரணமாக பிஐபி அல்லது எந்தவொரு நிறுவனமும் “உண்மையை சரிபார்க்க மத்திய அரசால் அங்கீகரிக்கப்படலாம்”. இதன் நோக்கம் உள்ளடக்கங்களை அகற்றுவதுதான். பல மட்டங்களில் இது சிக்கலானது. பேச்சுச் சுதந்திரத்திலும் தகவல் சுதந்திரத்திலும் இது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். “அரசின் கொள்கைகள், திட்டங்கள், முன்னெடுப்புகள் மற்றும் சாதனைகள்” பற்றிய தகவல்களை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு தெரிவிக்கும் பணியில் இருக்கும் “இந்திய அரசின் ஒருங்கிணைப்பு முகமை”க்கு ஒரு செய்தி உண்மையா, இல்லையா என்று முடிவு செய்யும் அதிகாரம் எப்படி இருக்கும் என்பதுதான் அடிப்படையாக எழுப்பப்பட வேண்டிய கேள்வி. சம்பந்தப்பட்ட ஒரு தரப்பே நடுவராகவும் இருக்கும் இந்த அபத்தம், தொந்தரவு செய்யக்கூடிய ஒன்று. தவறான தகவல்கள் இங்கு நிறைய இருக்கின்றனதான், ஆனால் அரசுகளுக்கு இதில் சுயநல நோக்கம் எதுவும் இல்லை என நம்ப முடியாது. இந்த முன்மொழிவு செயல்படுத்தப்பட்டால், அரசு அதன் விருப்பப்படி தகவல்களைத் தணிக்கை செய்யலாம்.
செய்திகளையும் தகவல்களையும் முறைப்படுத்தும் விஷயங்களில் அரசின் சிந்தனைப் போக்கில் ஏற்பட்டுள்ள புதிய வீழ்ச்சியை இந்த முன்மொழிவு காட்டுகிறது. எனினும் இதற்கு முன்பும் நிலைமை அப்படியொன்றும் நன்றாக இல்லை. செய்தித் துறையை கட்டுப்படுத்த அரசு விரும்புகிறது என்பதற்கான போதுமான சமிக்ஞைகள் சமீப காலங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன. 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தகவல் தொழில்நுட்ப விதிகளில் மாற்றம் கொண்டு வந்ததை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அரசு நிறுவனங்களுக்கு வரைமுறையற்ற அதிகாரம் வழங்கிய தனியுரிமை மசோதாவின் விதிகளிலும் இத்தகைய மனநிலை வெளிப்பட்டது. பொதுவெளியில் அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்துவதன் பொருட்டு தரவுகளையும் அறிக்கைகளையும் வெளியிடுவது பிஐபியின் வரம்புக்குள் வருகிறது. அதை தர்க்கரீதியாகவும் நியாயப்படுத்த முடியும். ஆனால் உண்மைகளை சரிபார்ப்பது என்பது வேறு. பல்வேறு சமூக ஊடங்கங்களில் பரவிய வதந்திகளை பிஐபியின் உண்மை சரிபார்ப்பு பிரிவு களையவில்லை என்று சொல்ல வரவில்லை. அது செய்திருக்கிறதுதான். ஆனால் அதை அரசின் நிறுவனமாக செய்திருக்கிறது. ஆனால், அதன் “உண்மை சரிபார்ப்புகளை” செய்தித் தளங்களில் கட்டாயமாக்குவது என்பது வேறு விஷயம். இதன் மூலம், அரசுக்கு எதிரான குரல்களை ஒடுக்கும் கருவியை அரசு கொண்டிருக்கும். நிச்சயமாக அது உண்மைத்தன்மையை சரிபார்க்கும் ஒரே நடுவராக இருக்கும். “போலி செய்திகள் எது என்று தீர்மானிப்பது அரசின் கைகளில் மட்டுமே இருக்கக் கூடாது என்றும் அது ஊடகத் தணிக்கைக்கு வழி வகுக்கும்” என்றும் சரியாகவே இந்த முன்மொழிவை விமர்சித்திருக்கிறது எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா. போலி செய்திகளை முறையாக கையாள வேண்டும். ஆனால் இந்த முன்மொழிவு அதை மேலும் கடுமையான பணியாக மாற்றும்.
This editorial was translated from English, which can be read here.
COMMents
SHARE