காங்கிரஸ் தலைவரும் அதன் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புத் துறைத் தலைவருமான பவன் கேரா, பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக விரும்பத்தகாத கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி ராய்ப்பூர் செல்லும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பின்னர் சிறிது நேரம் கைது செய்து வைக்கப்பட்டது, அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கு குற்றவியல் சட்டம் எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுத்தப்படலாம் என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு. உச்ச நீதிமன்றத்தில் அவருக்கான ஜாமீனை உறுதி செய்யும் உத்திரவை பவன் கேராவின் வழக்கறிஞர்கள் பெற்றுவிட்டார்கள். இருந்தாலும், அரசியல் அறிவுறுத்தலின் கீழ், அதிகாரம் ஆணவத்துடன் பயன்படுத்தப்படுவதை இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. ஒரு கருத்தை புண்படுத்தும் அல்லது மோசமான கருத்து என்று சொல்வது ஒரு விஷயம். ஆனால் அந்த கருத்தை தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான, மத உணர்வுகளை தூண்டுவதாக, சமூகத்தில் பகையை ஏற்படுத்தும் கருத்துகளாக புரிந்துகொள்வது வேறொன்று. மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேவையற்ற கைது நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தொலைதூர மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர் பயணம் செய்வது மிக அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். ட்விட்டரில் திரு. மோதியை ‘கோட்சே பக்தர்‘ என்று அழைத்ததற்காக குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை ஏப்ரல் 2022ல் கைது செய்த அசாம் காவல்துறை, அவரை அசாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இப்போது திரு. கேராவுக்கு எதிராகவும் இதே நடவடிக்கையை அசாம் காவல்துறை செய்ய முயன்றபோது, அது நீதிமன்றத்தால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. மற்ற இடங்களைப் போலவே பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களிலும் இந்த நிகழ்வுகள் செய்தியாகின்றன என்பது தவிர, தங்களது அதிகார வரம்புக்கு எந்த தொடர்பும் இல்லாத நிகழ்வுகளில் காவல்துறை நடவடிக்கை எடுப்பது கவலைக்குரியது.
கட்சி செய்தித் தொடர்பாளர்கள் ஊடகங்களிடம் பேசும்போது அரசியல் தலைவர்களுக்கு எதிராக தேவையற்ற குற்றச்சாட்டுகள் வருவது பொதுவாக நடப்பதுதான். திரு. கேரா பிரதமரின் பெயரை ‘கௌதமதாஸ்‘ என்று பயன்படுத்தியது திரு. மோதியின் ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏர்படுத்தியிருக்கலாம். அதை தொழிலதிபர் கவுதம் அதானியுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தான அவதூறாக அவர்கள் பார்த்திருக்கிறார்கள். சொல்லப்போனால், திரு. கேரா அவரது கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டார். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக கடுமையான மற்றும் விரும்பத்தகாத கருத்துகளுக்காக காவல்துறை பெரும்பாலும் வழக்குகளை பதிவு செய்துவிடுகிறார்கள். ஆனால், அது போன்ற வழக்குகளில் ஒருவரை கைது செய்வதற்கான அவசியம் என்ன என்பது கேள்விக்குரியது. திரு. கேராவைப் போல, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த கருத்துகள் முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது கடுமையான குற்றங்களுக்கு அரிதாகவே பொருந்தும். தீங்கு விளைவிக்கும் அல்லது அச்சுறுத்தலை வெளிப்படுத்தும் பேச்சுக்கு கைது செய்யலாம். ஆனால் கடுமையான அல்லது மோசமான கருத்துகளுக்கு அது தேவையில்லை. வெவ்வேறு அதிகார வரம்புகளில் உள்ள காவல் நிலையங்களில் பல முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவுசெய்வது, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான முயற்சிகள் எல்லாம் பல மாநிலங்களில் ஆட்சியாளர்கள் பொதுவாக கடைபிடிக்கும் விசயங்கள். ஆனால், ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றச்சாட்டுகளில் கைது செய்வது கைது விதிமுறைகளை மீறுவதற்கு ஒப்பானது என்பது இந்த சர்ச்சையில் பெரும்பாலும் மறக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் வழங்கும் பாதுகாப்பை, ஜாமீன் வழங்குவது அல்லது பல முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைப்பது ஆகியவற்றுடன் நிறுத்திக் கொண்டால் இது போன்ற மோசமான அத்துமீறல்கள் தொடரவே செய்யும். இந்த பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளை நீதிமன்றண் கேள்விக்குட்படுத்த வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.