ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் மொபைல் போன்களில் தனக்கு உள்ள மேலாதிக்க நிலையை துஷ்பிரயோகம் செய்ததற்காக கூகுள் நிறுவனத்திற்கு எதிரான இந்தியாவின் போட்டியியல் கட்டுப்பாட்டாளரின் சமீபத்திய உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்தது. அது விதித்த அபராதத் தொகை மட்டும் காரணமல்ல. அந்த ஐடி பெருநிறுவனம் மேற்கொள்ள வேண்டிய வர்த்தக நடைமுறைகளில் கடுமையான மாற்றங்களை கொண்டுவந்ததற்காகவும் அந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்தது. வியாழக்கிழமையன்று இந்தியப் போட்டியியல் ஆணையம் கூகுள் நிறுவனத்தின் மீது 1,337 கோடி ரூபாய் தற்காலிகத் தொகையை அபராதமாக விதித்தது. தவிர, அண்டிராய்ட் இயங்கு தளத்தை பயன்படுத்தும் போன்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுடனான ஒப்பந்தங்களில் போட்டியை விலக்கி வைக்கும் பொருட்டு கட்டுப்படுத்தக்கூடிய விதிகளை கொண்டிருப்பதற்காக கூகுள் நிறுவனத்தை கடுமையாக கண்டிக்கவும் செய்தது. அந்த ஒப்பந்தங்களின் காரணமாக, “மொபைல் கருவிகளில் பயனாளர்கள் தேடு தளமாக கூகுளையே பயன்படுத்துவதை உறுதிசெய்து, அதன் மூலம் அந்நிறுவனத்துக்கு தடையில்லாத விளம்பர வருவாய் கிடைப்பதாகவும்” அந்த உத்தரவு சொன்னது. இது போன்ற கட்டுப்பாடுகளை தன்னோடு ஒப்பந்தம் செய்யும் உற்பத்தியாளர்கள் மீது விதிக்கும் எண்ணத்தின் பின்னணியில் “பொது தேடு தளங்களிலும், அதன் மூலம் விளம்பர வருவாயிலும் தனது மேலாதிக்க நிலையை பாதுகாப்பதும் வலுப்படுத்துவதும்தான்” என்கிற முடிவுக்கு ஆணையம் வந்திருக்கிறது. போட்டியாளர்களை விலக்கிவைத்து, அதன் மூலம் பயனாளர்களின் தேர்வுரிமையை மறுக்கும் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களின் அதிகாரத்தை அறிந்த யாரும் கூகுளுக்கு விதிக்கப்பட்ட இந்த அபராதத்தையும் கூகுள் ‘தனது நடவடிக்கையை சரி செய்ய வேண்டும்’ என்ற உத்தரவையும் வரவேற்பார்கள். இது கூகுளுக்கு வழக்கமான ஒரு வர்த்தக பிரச்னையாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், ஆணையம் அதற்கு எதிராக ‘நிறுத்தம் மற்றும் விலகல்’ (cease and desist) உத்தரவை
பிறப்பித்திருக்கிறது. இதனால், மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுடனான ஒப்பந்தங்களில் விதிமுறைகளை அது பெரிய அளவில் மாற்ற வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, இந்த உத்தரவின்படி மொபைல் போன் உற்பத்தியாளர்களிடம் தன் செயலிகளை அந்த போன்களில் நிறுவி அனுப்ப வேண்டுமென கூகுள் சொல்ல முடியாது. போலவே, க்ரொம், யூடியூப், மேப்ஸ் போன்ற கூகுள் செயலிகளை உற்பத்தியாளர்கள் கருவிகளில் முன் நிறுவுதலை பிளே ஸ்டோரில் உரிமம் பெறுவதற்கான முன் நிபந்தனையாக விதிக்க முடியாது என்றும் உத்தரவு சொல்கிறது. முன் நிறுவப்பட்ட செயலிகளை பயனாளர்கள் அகற்ற முடியாது என்கிற கட்டுப்பாட்டையும் விலக்க வேண்டும் என்று கூகுளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த தேவைகளில் ஒன்று, கூகுளின் முதன்மையான வருவாய் உற்பத்தி நிலையை குறி வைக்கிறது. “ஒரு பயனர் போன்களை வாங்கியவுடன் தகவல்களை உள்ளீடுசெய்யும்போது, எந்தத் தேடுபொறி தனக்கான நிரந்தர தேடுபொறியாக எல்லா இடத்திலும் இருக்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய கூகுள் அனுமதிக்க வேண்டும்” என்று அது சொல்கிறது. இதுவும் இது போன்ற பிற கட்டுப்பாடுகளும் கூகுள் இந்தியாவில் அதன் வணிக மாதிரியை சற்று மாற்றியமைக்க வேண்டிய நிலையை உருவாக்கலாம். இந்திய வர்த்தகங்களுக்கும் பயனர்களுக்கும் இது ‘மிகப்பெரிய பின்னடைவு’ என்று இந்த உத்தரவைப் பற்றி சொல்லியிருக்கிறது கூகுள். இதனால் பாதுகாப்பு அபாயங்கள் அதிகரிக்கும் என்பதோடு மொபைல் கருவிகளின் விலையும் கூடலாம் என்றும் சொல்கிறது கூகுள். சட்ட ரீதியான மறு ஆய்வுக்கு வாய்ப்பு இருக்கிறது என்றாலும், போட்டி நிலவும் சூழலுக்கு எதிரான கூகுள் நிறுவனத்தின் நடைமுறைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிற அளவில் ஆணையத்தின் பங்கு முக்கியமானது. ஒரு டிஜிட்டல் அதிகார மையமாக உருவாகக்கூடிய வாய்ப்புள்ள இந்தியா போன்ற நாட்டில் பயனாளர்களுக்கு வேண்டியதெல்லாம் அசலான தேர்வுகளுக்கான ஒரு சூழல்தான்.
This editorial has been translated from English, which can be read here.