பொதுத் தேர்தலுக்கு முந்தைய வருடத்தில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை பொதுவாக சமூகத்தின் பரந்த பகுதியினரை முடிந்தவரை திருப்திப்படுத்த முயற்சிக்கும் ஒன்றாக இருக்கும். இதைத் தொடர்ந்து ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு நிதியளிக்கும் அமைச்சரவைகள் அதற்கான ஒதுக்கீட்டில் ஆரோக்கியமான உயர்வையும் காணும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரவை இந்த வருடம் ரூ. 16,361.42 கோடி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது. இது முந்தைய மதிப்பீட்டை விட 15 சதவீதம் அதிகம். ஆனால், 2021-22 மற்றும் 2022-23 வருடங்களுக்கிடையில், அமைச்சரவைக்கான ஒதுக்கீடு 3.9 சதவீத வீழ்ச்சியை கண்டிருக்கிறது. இந்த உயர்வின் பெரும்பகுதி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு சென்றிருக்கிறது. அதாவது ரூ. 7,931.05 கோடி. இது கடந்த வருடத்தைவிட 32.1 சதவீதம் அதிகம். உயிரி தொழில்நுட்பத் துறைக்கு ரூ. 2,683.86 கோடியும் (3.9 சதவீதம் என்கிற அளவில் ஒரு சுமாரான உயர்வு), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கு ரூ. 5,746.51 கோடியும் (1.9 சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் திட்டம் - ஆழத்தில் செல்லக்கூடிய நீர்மூழ்கி வாகனத்தை உருவாக்கும் பிற அம்சங்களை உள்ளடக்கியது - மற்றும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை முந்தைய வருடங்களைவிட கணிசமாக அதிக உயர்வுகளைப் பெற்றிருப்பது, மத்திய அரசின் உடனடி கவனம் அவற்றின் மீதிருப்பதன் குறியீடாக இருக்கிறது.
‘செயற்கை நுண்ணறிவு‘ ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான பிரத்யேக மையங்களில் முதலீடு செய்வது, ஆய்வகத்தில் தயாரிக்கப்படக்கூடிய வைரங்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மற்றும் அரிவாள் செல் இரத்த சோகை (Sickle cell anaemia) ஆராய்ச்சி மையம் ஆகியவை குறித்து நிதிநிலை அறிக்கை உரையில் பல குறிப்புகள் இருந்தன. அரசின் பல துறைகள் வாயிலாக இந்த முயற்சிகளை அனைத்தையும் பரவச் செய்ய முடியும் என்றாலும், நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடுகளை வைத்துப் பார்க்கும்போது அடிப்படை ஆராய்ச்சிக்கு குறிப்பிடத்தக்க உயர்வு இருப்பதுபோலத் தெரியவில்லை. முந்தைய அரசுகளைப் போலவே, இந்த அரசும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவின சதவீதத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கவில்லை. பல்வேறு நாடுகள் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான செலவுகளை பல்வேறு வகைகளில் வரையறுத்தாலும், வளர்ந்த மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்துக்கும் அதிகமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் செலவு செய்வதென்பது அடிப்படை விதியாக இருக்கிறது. சர்வதேச புதுமைக் குறியீட்டின் (Global Innovation Index) 2022 மதிப்பீட்டின்படி, அறிவியல் சார்ந்த கட்டுரைகளை அளிப்பதில் உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் இந்தியாவின் செலவினம் 0.7 சதவீதம் என்கிற அளவிலேயே இருக்கிறது. இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுத் துறை நிதி ரீதியான சவாலை மட்டும் எதிர்கொள்ளவில்லை. பல துறைகளில் குறிப்பிடத்தக்க உயர்வுகள் இல்லாததை வைத்துப் பார்க்கும்போது, நாட்டின் அறிவியல் நிறுவனங்களுக்கு அவற்றை ஏற்றுக்கொள்ளும் திறன் குறைவாக இருப்பதையே காட்டுகிறது. ஆராய்ச்சி மாணவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நிதி சரியான நேரத்தில் கிடைக்காததும், ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தரமான உபகரணங்களுக்காக காத்திருப்பதும் ஒரு பெரிய சவாலாகத் தொடர்கிறது. அதிகாரத்தின் விருப்பு-வெறுப்புகளில் இவை தொடர்ந்து சிக்கியிருப்பதையே காட்டுகிறது. ஆராய்ச்சிக்கு இப்போதும் பெரும்பாலும் நிதியளித்து வருவது அரசுதான். தனியார் துறையின் பங்கேற்பு படிப்படியாகதான் வளர்ந்து வருகிறது. அடுத்த சில வருடங்களில் அரசு நிதியின் அளவை அதிகரிப்பதோடு அல்லாமல், அவற்றை திறன்பட பயன்படுத்த, நடைமுறைகளையும் எளிதாக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.