பாரத் பயோடெக்கின் மூக்கு வழி கோவிட்-19 தடுப்பு மருந்தை பெரியவர்களுக்கான முதன்மை தடுப்பூசியாக வழங்குவதற்கான அவசர பயன்பாட்டு அனுமதி தரப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கின்றன. தற்போது 18 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களிடத்தில் பன்முகத்தன்மை கொண்ட பூஸ்டராக செலுத்தப்படுவதற்கான அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது. செயலிழக்கம் செய்யப்பட்ட தடுப்பூசியான கோவாக்சின் போலல்லாமல், மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்து, வைரஸைப் பரப்பக்கூடிய உயிரியைத் தளமாகப் பயன்படுத்துகிறது. மறுசேர்க்கை அடினோவைரஸ்தான் இதில் அந்தத் தளம். ஏற்கனவே கோவாக்ஸின் அல்லது கோவிஷீல்ட் மருந்துகளை இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட 875 பங்கேற்பாளர்களிடம் ஒரு பன்முகத்தன்மை கொண்ட பூஸ்டராக மூக்கு வழி தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. பிற தடுப்பூசிகளை விட மூக்கு வழி தடுப்பு மருந்துக்கு உள்ள கூடுதல் நன்மை, அது சுவாசக் குழாயில் வைரஸ் நுழையும் புள்ளியில் சார்ஸ்-கோவ் - 2 தொற்றை தடுக்கும் என்பதுதான். தவிர செலுத்துவதற்கும் எளிதானது. முதன்மை தடுப்பூசியாக மூக்கு வழி தடுப்பு மருந்தை செலுத்துவதைப் போலவே, பூஸ்டர் டோஸ் சோதனையிலும் அது பாதுகாப்புக்காகவும் நோயெதிர்ப்புத் திறனுக்காகவும் மட்டுமே சோதிக்கப்பட்டதே தவிர, செயல்திறனுக்காக இல்லை. தொற்று நோயின் ஆரம்பக் கட்டத்தில் செய்யப்பட்ட தடுப்பூசி பரிசோதனை போல் இல்லாமல், இன்றைய நிலையில் ஒரு புதிய தடுப்பூசியை முதன்மை தடுபூசியாகவோ பன்முகத்தன்மை கொண்ட அதன் செயல்திறனுக்காகவோ மதிப்பிடுவது மிகவும் சவாலானதாக இருக்கலாம். காரணம், பெரும்பாலான மக்கள் ஏற்கனவே தடுப்பூசியை பெற்றவர்களாகவோ அல்லது இயற்கையாகவே தொற்று கொண்டவர்களாகவோ இருப்பார்கள். குறிப்பாக ஒமிக்ரான் வகைக்கு இது பொருந்தும். ஆனால், அதிக நோயெதிர்ப்புத் திறன் என்பது அதிக செயல்திறனாக குறிப்பாக தொற்றை தடுக்கும் தடுப்பூசியின் திறனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சார்ஸ்-கோவ்-2 வைரஸ் இப்போதுள்ள
நோயெதிர்ப்பு சக்தியை தவிர்ப்பதிலும் தொற்றை ஏற்படுத்துவதிலும் அதிக திறனை கொண்டிருக்கிறது. மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்தைப் பொறுத்தவரையில் புதிய பிறழ்வுகளைக் கொண்ட வைரஸ் ஸ்பைக் புரதம் இல்லாததால், அது முதன்மை தடுப்பூசியாகவோ பூஸ்டராகவோ செலுத்தப்படும் போது குறிப்பிட்டக் காலத்துக்குள் தொற்றை, தீவிர நோயை, மரணத்தை தடுக்கும் மூக்கு வழி தடுப்பு மருந்தாக, அதன் செயல்திறனை ஆராய வேண்டியது முக்கியம். மாறாக, மனிதர்கள் மீது நோயைத் தொற்றவைத்து நடத்தப்படும் ஆய்வுகளிலும் தடுப்பூசியின் செயல்திறனை சோதிக்க முடியும். இதனை ஆராய்வதும் மிக முக்கியம். காரணம், தசைவழியாக செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தை, மூக்கு வழித் தடுப்பு மருந்தாக பயன்படுத்தி முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டபோது, குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களிடத்தில் மட்டும் antigen-specific mucosal antibody எதிர்வினைகளை பெற்றது. மேலும் இயற்கை தொற்றைவிட பிறப்பொருளெதிரி (antibody) அளவுகள் மிகக் குறைவாகவே இருந்தன. மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்து என்ற வகையில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி “நிலையான மியுகோசல் ஆண்டிபாடி எதிர்வினையையோ அல்லது ஒரு வலுவான முறையான எதிர்வினையையோ” வெளிப்படுத்தவில்லை. ஜனவரி மாத இறுதியில் மூன்றாவது அலை உச்சத்தை எட்டியதிலிருந்து முதன்மை தடுப்பூசிக்கான தேவை குறைந்து வருகிறது. தவிர, ஜூலை மாத மத்தியில் தொடங்கி 75 நாட்களுக்கு இலவசமாக கிடக்கும் நிலையிலும் பூஸ்டர்களுக்கான தேவை குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் இந்தியாவுக்கான ஒரு புதிய தடுப்பூசி தளமாக மூக்கு வழி தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தொற்றைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பான, பயனுள்ளா தடுப்பூசி இருப்பது இன்னமும் அதிக முக்கியத்துவம் கொண்ட ஒரு விஷயமே.
This editorial has been translated from English, which can be read here.