ஒரு காலத்தில் ஆளும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் வளர்ந்து வரும் நட்சத்திரம். பிறகு தனது முன்னாள் தலைவரால் சிறைக்குத் தள்ளப்பட்ட கலகக்காரர். அன்வர் இப்ரஹிமின் கதை என்பது, அதிகாரம், கலகம், சிறை மற்றும் மீண்டெழுதலின் கதை. அவரது நீண்ட அரசியல் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளில் திரு. அன்வர் தனது அரசியல் செயல்பாட்டிலோ ‘ரிஃபார்மஸி’ என்னும் அவரது இயக்கத்தின் மீதான நம்பிக்கையிலோ எப்போதும் சமரசம் செய்து கொண்டதில்லை. இருபது ஆண்டுகளாக போக்குக் காட்டி வந்த பதவிக்கு இறுதியில் அவரை அது இட்டுச் சென்றிருக்கிறது. கடந்த வார தேர்தல்களில் அவரது கூட்டணியான பக்காத்தான் ஹராப்பன் (நம்பிக்கையின் கூட்டணி) நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அணியாக உருவானது. அதைத் தொடர்ந்து அந்த 75 வயது தலைவரை மலேசிய அரசர் பிரதமராக நியமித்தார். 1990களில் துணைப் பிரதமராக இருந்த திரு. அன்வர் அப்போது சர்வ வல்லமை பொருந்திய பிரதமர் மஹாதீர் முகமதுவின் வாரிசாகதான் பார்க்கப்பட்டார். ஆனால் அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகளும் குறிப்பாக மலாய் தேசிய அமைப்பிலும் அரசிலும் சீர்திருத்தங்களுக்காக அவர் குரல் கொடுத்ததும் அவரது வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றன. ஒரு பால் புணர்ச்சிக்காக குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அதை அவர் மறுக்கிறார். இரண்டு சிறை தண்டனைகளுக்குப் பிறகு, திரு. அன்வர் 2018ல் டாக்டர். மஹாதீருடன் கைகோர்த்துக் கொண்டு ஊழல் குற்றசாட்டுகளில் சிக்கிக்கொண்டிருந்த மலாய் தேசிய அமைப்பிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றினார். மீண்டும் பிரதமரான டாக்டர். மஹாதீர், திரு. அன்வருக்கு பொது மன்னிப்பு வழங்கினாலும் அவருடன் அதிகாரத்தை பகிரவில்லை. இதன் காரணமாக, நாடு ஒரு அரசியல் நிலையற்றதன்மைக்கு சென்றது. ஆனால் இந்த முறை திரு. அன்வருக்கு எந்தவிதமான சட்டரீதியான இடர்பாடும் இல்லை. அதிகாரத்தை அடைவதில் உடனடியாக எந்த சவாலையும் அவர் எதிர்கொள்ளப்போவதும் இல்லை. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் மலேஷியாவின் பிளவுபடுத்தும் அரசியலையும் எடுத்துக்காட்டியிருக்கின்றன. முதல்முறையாக தொங்கு நாடாளுமன்றத்துக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஊழலற்ற
நிர்வாகத்தையும் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பையும் வாக்குறுதியாக தந்த திரு. அன்வரின் கூட்டணி 222 தொகுதிகளில் 82ஐ வென்றது. முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினின் பெரிகாத்தான் நாசியோனல் அணி 73 தொகுதிகளைப் பெற்றது. மலாய் தேசிய அமைப்பு ஆதிக்கம் செலுத்திய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோபின் பாரிசான் நாசியோனல் 30 இடங்களை மட்டுமே பெற்று தோற்கடிக்கப்பட்டது. மலாய் தேசிய அமைப்பின் மீது மக்களுக்கு அதிகரித்து வரும் வெறுப்புணர்வை இந்த தேர்தல் முடிவுகள் அடிகோடிட்டுக் காட்டியிருக்கின்றன. அதே நேரம் பெரிக்காத்தான் கூட்டணியின் ஒரு அங்கமான மலேஷிய இஸ்லாமிய கட்சியின் வளர்ச்சியையும் காட்டுகிறது. தன்னளவிலேயே 48 தொகுதிகளை பெற்றிருந்த அந்த கட்சி, மலேஷியாவில் ஒரு இறை சார்ந்த இஸ்லாமிய ஆட்சி வேண்டுமென்றும் அரசியலமைப்பை மதரீதியாக புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. மலேஷிய சமூகத்தின் அதிகரித்து வரும் பிளவுதான் இப்போது திரு. அன்வர் சந்திக்கும் மிகப்பெரிய சவால். எதிர்கட்சித் தலைவராக அவர் சமத்துவத்துக்கும் சிறுபான்மை உரிமைக்கும் குரல் கொடுத்தார். ஊழலுக்கும் பாரபட்சத்துக்கும் எதிராக கேள்வி எழுப்பினார். இப்போது பிரதமராக அதை அவர் செயல்களில் காட்ட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு அவரது அரசு கூட்டணியினரை நம்பியிருக்கும் நிலையில், அவரது முற்போக்கு செயல்திட்டத்துக்கு சவால் விடும் இஸ்லாமிய சக்திகள் வளர்ந்து வரும் சூழலில் அவர் இதை செய்ய வேண்டும். கடினமான பணிதான்.
This editorial has been translated from English, which can be read here.