எகிப்தில் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. சபையின் உச்சி மாநாடு (காப் 27) நடந்து முடிந்த ஒரு மாதத்திற்கு பிறகு, இந்த பூமியை காப்பாற்றுவதற்கு இன்னுமொரு சச்சரவான கூட்டத்தை கூட்டியிருக்கின்றன ராஜதந்திர பரிவாரங்கள். இந்த முறை, கனடாவிலுள்ள மாண்டிரியோலில் உயிரியில் பன்முகத்தன்மை மாநாடாக (Convention on Biological Diversity - சிபிடி) அது நடக்கிறது. 1992ல் நடந்த ரியோ உச்சி மாநாடுதான் இந்த இரு மாநாடுகளுக்கும் தொடக்கப்புள்ளி என்றாலும், ‘காப்’புக்கு கிடைக்கும் ஊடக கவனத்தோடு ஒப்பிட்டால் அதன் அருகில் கூட சிபிடியால் வர முடியாது. மகத்தான வாக்குறுதிகளை வழங்கும் உலகத் தலைவர்களும் அரசு தலைவர்களும் இங்கு இல்லை. காரணம், இப்போதும் சிபிடி என்பது சுற்றுசூழல் பிரச்னையாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப்படிதான் முன்பு ‘காப்’ இருந்தது. அதாவது பசுமையில்ல வாயுக்களில் இருந்து மீள இயலாமல் வெந்து கொண்டிருக்கும் ஒரு உலகை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலமாக காப்பாற்றக்கூடிய உலகமாக முதலாளித்துவ சக்திகள் மீள்கற்பனை செய்யும் வரையில் அப்படிதான் இருந்தது. குறைந்தபட்சம், சில தொழில்முனைவோர்களாவது பணக்காரர்களாவார்கள். கண்ணுக்குப் புலப்படாத வாயுக்களால் நிகழக் கூடிய காலநிலை நெருக்கடியை நம் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி வடிவங்களாக இருக்கும் புயல்களைப் போலவோ உருகும் பனிப்பாறைகள் போலவோ அல்லாமல், பல்லுயிர் இழப்பால் பாதிக்கப்படுபவர்கள் மிக எளிதாக புலப்படுபவர்களாக இருந்தாலும் பல்லுயிர் இழப்பு பெரும்பாலும் கண்ணுக்கு தெரிவதில்லை. தற்போதைய போக்குகளின்படி, 34,000 வகை தாவரங்களும் 5200 விலங்கு இனங்களும் அழிவை எதிர்நோக்கியிருப்பதாக ஐ.நா. கருதுகிறது. உலகிலுள்ள பறவையினங்களில் எட்டில் ஒன்று இதுபோல அழிவைச் சந்திக்கிறது. பிரதானமான பண்ணை விலங்கு இனங்களில் சுமார் 30 சதவிகிதம் அழியும் நிலையில் இருக்கின்றன. நிலப்பரப்பு சார்ந்த பல்லுயிரியத்துக்கு தாயாக காடுகள் இருக்கின்றன. ஆனால் இந்த பூமியின் அசலான காடுகளில் 45 சதவிகிதம் அழிந்துவிட்டன. இந்த அழிவில் பெரும்பகுதி கடந்த நூற்றாண்டில் நடந்திருக்கிறது. இருந்தாலும், தனி நபர் கார்பன் உமிழ்வு அதிகரிப்பு போலவோ, வெப்பநிலை மாற்றங்கள் போலவோ இந்த அழிவு நுணுக்கமாக கணக்கிடப்படாத நிலையில், அதற்கு
தகுதியான அவசர நடவடிக்கையை ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், பல்லுயிரியத்தில் தாக்கம் செலுத்துவதாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைப்பது போன்ற முன்மொழிவுகளில் கடுமையான இலக்குகள் வேண்டாம் என்கிற இந்தியாவின் நிலைப்பாடும் நிலம் மற்றும் கடல் வளங்களில் 30 சதவிகிதத்தைப் பாதுகாப்பது என்கிற முடிவும், முரண்பாடான ஒன்றாக இருக்கிறது. சூழல் காப்பிலும் இயற்கையோடு இயைந்த வாழ்விலும் தன்னை இந்தியா முன்னோடியாக நினைத்துக் கொள்ளும் நிலையில் இந்த முரண் இன்னும் குறிப்பாக வெளிப்படுகிறது. காலநிலை மாநாடுகளிலிருந்து பேச்சுவார்த்தைக்கான நெளிவு சுளிவுகளை கைகொள்ளும் இந்தியா, பல்லுயிர் பாதுகாப்பைப் பொறுத்தவரையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு அளவிலான பொறுப்புகள் உள்ளதென்று (பணக்கார நாடுகள், சர்வதேச பாதுகாப்பு முயற்சிகளுக்கு அதிக தாராளமான நிதியளிப்பவர்களாக இருக்க வேண்டுமென்பது) வாதம் செய்கிறது. ஆனால், நாடுகள் திட்டவட்டமான இலக்குகளுக்கு உடன்படாவிட்டால் இது போன்ற கோரிக்கைகள் ஒரு முட்டுச் சந்தில் போய் நின்றுவிடும் என்பது தெளிவாகத் தெரிந்ததுதான். ஒரு பழமொழி சொல்வதுபோல எதை அளவிட முடியாதோ அதை புரிந்து கொள்ளவோ, நிவர்த்தி செய்யவோ முடியாது. சிபிடியின் நிர்வாக செயலாளர் எலிசபெத் மருமா மிரெமா இந்த பேச்சுவார்த்தைகள் “இயற்கைக்கான பாரிஸ் தருணத்தை” விளைவிக்க வேண்டும் என்றார். அப்படி நடக்கவில்லை என்றாலும், 2024க்குள் உறுதியான திட்டங்களை வகுக்க நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. 2030க்குள் பணக்கார நாடுகள் ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர் அளிக்கவும் உறுதியளித்திருக்கிறார்கள். ஆனால் உறுதியான முடிவுகளைக் காண்பதற்கு இன்னும் வெகு காலம் ஆகும்.
This editorial has been translated from English, which can be read here.