2002ல் குஜராத் கலவரங்களில் அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோதியின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தும் பிபிசி ஆவணப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு நடப்பதையெல்லாம் பார்த்தால், ‘ஸ்ட்ரைசாண்ட் விளைவு’ மீண்டும் அரேங்கேறுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது ஒரு விஷயத்தை தடுத்து, அதை தணிக்கை செய்வதன் விளைவாக அதற்கு கூடுதலான கவனத்தை ஏற்படுத்திக் கொடுப்பது நடந்துகொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 மற்றும் ஐடி சட்டம் 2000ன் பிரிவு 69 ஏவின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி வலைதளங்களில் ஆவணப்படத்தின் முதல் அத்தியாயத்தை முடக்க உத்தரவிட்டதோடு, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரவை ஆவணப்படத்தின் இணைப்பை பகிர்ந்த 50க்கும் மேற்பட்ட டிவீட்களையும் முடக்கியது. ஆனால் இதன் விளைவாக குடிமக்கள் தங்களது மொபைல் போன்களின் வழியாகவும் திரையிடல்கள் வழியாகவும் படத்தை அதிகம் பார்க்கத் தொடங்கினார்கள். அதாவது, தகவல்களை தடுப்பது அது குறித்த அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் எதிர்பாராத விளைவுகளை உருவாக்கிவிட்டது. வேறு வார்த்தைகளில் சொன்னால் இதுதான் ‘ஸ்ட்ரைசாண்ட் விளைவு’. தில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் ஆவணப்படத்தை திரையிடப் போவதாக சொல்லி 13 மாணவர்களை கைதுசெய்தது போன்ற நடவடிக்கைகள் அதீதமானது மட்டுமல்லாமல் அதிகார துஷ்பிரயோகமும்கூட. ஆட்சியை விமர்சிக்கிறது என்பதற்காக ஊடக செய்திகளின் பரவலை அரசு தன்னிச்சையாக தடுக்க கூடாது என்பதை சொல்லத் தேவையில்லை. ஆவணப் படம் பிரச்சாரத்தன்மை கொண்டதாகவும் காலனியாதிக்க மனநிலையை பிரதிபலிப்பதாகவும் சொல்லி அவசரகால அதிகாரங்களை பயன்படுத்துவதை நியாயப்படுத்தியிருப்பது, குஜராத் கலவரம் மற்றும் அதன் பின்னர் நடந்தவற்றை பற்றிய ஊடக செய்திகளின் தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கும்போது, எடுபடவில்லை. எப்படியிருந்தாலும் பிரச்சாரத்தை பிரச்சாரத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர தணிக்கையால் அல்ல.
கலவரத்திற்கும் கொடூரமான குற்றங்களுக்கும் இட்டுச் சென்ற நிகழ்வுகள், அப்போதிருந்த அரசின் மோசமான அலட்சியப் போக்கு, சட்ட நடவடிக்கைகளுக்கான போதுமான உதவிகள் இல்லாதது போன்றவை இந்திய ஊடகங்களால் நன்றாகவே ஆவணப் படுத்தப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் மட்டுமல்லாமல் வேறு பகுதிகளிலும் அரசியலின் தன்மையை மாற்றிய இந்திய வரலாற்றின் ஒரு பகுதியைப் பற்றிய மற்றுமொரு ஊடக விசாரணைதான் பிபிசியின் ஆவணப்படம். பிரச்சாரத் தொனி கொண்டது என்கிற அடிப்படையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரவை முதல் அத்தியாயத்தை ஆன்லைனில் தடை செய்திருப்பது நியாயமற்றது என்பதோடு இதை பேச்சு சுதந்திரத்துக்கான பிரச்னையாக அணுகாமல் ஐடி விதிகளை பயன்படுத்தி அதிகாரத்தை நிலை நாட்டும் ஒரு போக்காகவும் இருக்கிறது. ஆன்லைன் செய்தித் தளங்கள் மீது அரசுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் இருக்கும் வகையில் பிப்ரவரி 2021ல் ஐடி விதிகள் திருத்தப்பட்டன. அதன் நடவடிக்கைகள் இப்போது நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்திய உயர் நீதிமன்ற தீர்ப்புகள்கூட பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை கணக்கில் எடுத்திருப்பதோடு, டிஜிட்டல் தளங்களில் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு தடை போட்டிருக்கின்றன. ஐடி விதிகளைப் பயன்படுத்தி வெறுப்பு பேச்சையும் தவறான தகவல் பரவலையும் முறைப்படுத்தாமல், விமர்சனப்பூர்வமான விஷயங்களைத் தடை செய்யவே மத்திய அரசு தீவிரமாக இருப்பதை இந்த நடவடிக்கைகள் தெளிவாகக் காட்டியிருக்கின்றன. இன்றைய டிஜிட்டல் ஊடக சூழல் அமைப்பில் இதுதான் உண்மையான சாபக்கேடு.
his editorial has been translated from English, which can be read here.