செல்வாக்குகொண்ட ஐ.நாவின் காலநிலை மாற்றத்துக்கான அரசுகளுக்கிடையிலான குழு (ஐபிசிசி) அதன் தொகுப்பு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. ஆறாவது மதிப்பீட்டு காலத்தின் ஒரு பகுதி, இந்த அறிக்கை. 1990ஆம் வருடம் தொடங்கி ஐபிசிசி பசுமையில்ல வாயு உமிழ்வுகளுக்கும் காலநிலை மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றிய சர்வதேச அறிவியல் ஆய்வின் தொகுப்பை வெளியிட்டு வருகிறது. அப்போதிலிருந்தே கூட, மனித நடவடிக்கைகள் உலகை மீளமுடியாத பேரழிவுகளை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பதற்கான சான்றுகள் வலுவாகியிருக்கின்றன. ஐபிசிசியின் பல்வேறு மதிப்பீட்டு காலங்கள் இதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியிருக்கின்றன. ஸ்விட்சர்லாந்தின் இன்டர்லேக்கனில் ஒரு வார கால விவாதங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. காரணம், 2018லிருந்து வெப்பமயமாதலில் மனிதத் தொடர்பு அதிகரித்திருப்பதை ஆய்வு செய்ததோடு இல்லாமல் பல்வேறு கோணங்களிலிருந்து 2015 பாரிஸ் ஒப்பந்தத்தை பூர்த்தி செய்யாமல் இருப்பது ஏற்படுத்திய தாக்கங்கள், தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தைவிட வெப்ப நிலை 1.5 டிகிரி செல்ஷியஸ் உயராமல் இருப்பதற்கான முயற்சிகள் போன்றவற்றின் அறிக்கைகள் தொகுப்புதான் இது. வளர்ந்த நாடுகளில் இருந்து வளரும் நாடுகளுக்கு நிதி செல்ல வேண்டியதன் அவசியத்தையும், காலநிலை மாற்றத்தால் அதிகம் இழக்கும் நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதன் தேவையையும், மீள்தன்மையை உருவாக்க உதவ வேண்டிய தேவையையும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. கொள்கையை வகுப்பவர்களுக்கான தொகுப்பாக உள்ள இந்த அறிக்கை, வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்ஷியசுக்குக் கீழ் வைத்திருப்பதன் மூலம் 2019ல் 48 சதவிதமாக குறைந்த பசுமையில்ல வாயு உமிழ்வுகளை 2050க்குள் 99 சதவீதம் வரை குறைப்பதுதான் இந்த பூமிக்கு உள்ள ஒரே சிறந்த வாய்ப்பு. இப்போதைக்கு நாடுகள் அறிவித்துள்ள கொள்கைகள் மொத்தமும்
முழுமையாக அமல்படுத்தப்பட்டால், 2100ல் 2.5 டிகிரி செல்சியஸ் முதல், 3.2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக் கூடும். நவம்பரில் துபாயில் திட்டமிடப்பட்டிருக்கும் ‘காப்’ என்று அழைக்கப்படும் காலநிலை மாற்றத்துக்கான மாநாட்டின் அடுத்த அமர்வில் இந்த அறிக்கை குறிப்பிடத்தக்க அளவில் கவனத்தை கோரும். அந்த மாநாட்டில் பாரிஸ் ஒப்பந்தத்தில் தரப்பட்ட உறுதிகளை நாடுகள் எந்தளவுக்கு கடைப்பிடித்திருக்கின்றன என்பதை சர்வதேச அளவில் கணக்கிடும் நிகழ்வுதான், முக்கியமான் அம்சமாக இருக்கும். ஐபிசிசி அறிக்கைகள் பொதுவாக அழிவை முன்னறிவிப்பதாக பார்க்கப்படுகின்றன. ஆனால் தற்போதைய அறிக்கை சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தின் குறைந்து வரும் செலவு மற்றும் மின்சார வாகனங்களின் விரிவாக்கம் குறித்தும் பேசுகிறது. ஆனால் எதிர்மறை உமிழ்வுகள் இல்லாமல் அல்லது கார்பன் டை ஆக்சைடை அகற்றாமல் பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடைய முடியாது. இதற்கு இதுவரை சோதனை செய்யப்படாத தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும். அது மிக விலையுயர்ந்ததும்கூட. அறிக்கையை “வரவேற்றிருக்கும்” இந்தியா, அதன் நிலைப்பாட்டை பல பகுதிகள் அடிகோடிட்டுக் காட்டுவதாக சொல்கிறது: அதாவது காலநிலை நெருக்கடி என்பது சமத்துவமற்ற பங்களிப்புகளால் ஏற்படுகிறது என்பதும், காலநிலை நீதி என்பதும் தணிப்பு மற்றும் தகவமைப்பை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்பதும்தான் அது. அதே நேரம் நாடுகள் தங்களுக்கு உகந்த தளங்களிலிருந்து வெளியேறி ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த உலகுக்கு பேரழிவு நிகழாமல் இருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்ற செய்தியையும் இந்தியா புறக்கணிக்கக்கூடாது.
This editorial has been translated from English, which can be read here.