சமீபத்திய வரலாற்றில் நோவக் ஜோகோவிச்சைப் போல எந்த ஆண் வீரரும் வலியையும் ஏமாற்றத்தையும் வெற்றிக்கான உந்துதலாகப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு, இந்த செர்பிய வீரர் தடுப்பூசி போடாமல் இருந்ததற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அங்கு மூன்று முறை நடப்பு சாம்பியனாக இருந்தவர் அவர். ஞாயிறு அன்று அந்த கடினமான நினைவுகளை அகற்ற, அவர் அதிகமாகவே செயல்பட்டார். பத்தாவது ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையர் பட்டத்தை (ஓபன் எரா) வென்று சாதனை படைத்தார். கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை நேர் செட்களில் வென்றதன் மூலம், 22 பெரிய கோப்பைகளை வென்ற ரஃபேல் நடாலின் சாதனைக்கு நிகராக ஜோகோவிச் நின்றார். ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் மிகச் சிறந்தது இது. நம்ப முடியாத 12 மாதங்களின் முடிவில் இந்த வெற்றி ஜோகோவிச்சுக்கு வந்தது. 2022 ஆம் ஆண்டில், நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரண்டிலும், எட்டு ‘ஏடிபி மாஸ்டர்ஸ் 1000’ போட்டிகளில் நான்கிலும் போட்டியிட அவர் அனுமதிக்கப்படவில்லை. தவிர விம்பிள்டனை வென்றதற்காக எந்த புள்ளிகளையும் பெறவில்லை. இருப்பினும், ஐந்து சிறந்த பட்டங்களை (கார்லோஸ் அல்காராஸுடன்) இணைந்து வென்று, முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்றார். இந்த மாத தொடக்கத்தில் அடிலெய்டு சர்வதேச போட்டியிலும், அதைத் தொடர்ந்து மெல்போர்னிலும் அவர் பெற்ற வெற்றிகள், அவரை எப்போதும் அவருக்கானதாக தோன்றும் இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன – அதாவது 374வது வாரமாக ஏடிபி தரவரிசையின் உச்சத்தில் நிறுத்தியிருக்கின்றன. 36 வயதை எட்ட இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், ஒரு தடகள வீரரின் உடல் வலிமை – மன வலிமை எப்படியிருந்தாலும் – கடந்த காலத்தைப் போல இருக்காது. நடால் விஷயத்தில் இது உண்மையாகத் தோன்றினாலும், ஜோகோவிச்சைப் பொறுத்தவரையில் அவரது வெல்ல முடியாத தன்மை இன்னும் உறுதியாகவே இருக்கிறது.
பெண்கள் தரப்பில், ஆர்னா சபலென்காவின் டென்னிஸ் ஆட்டம் கச்சிதமாக இருந்தது. தற்போது விம்பிள்டன் சாம்பியனாக இருக்கும் கஜகஸ்தானின் எலினா ரைபாகினாவை வீழ்த்தி தனது முதல் மேஜர் பட்டத்தை வென்றார். 2021ல் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபனில் கடைசி நான்கு இடங்களை எட்டிய அவர் இன்னும் பெரிய சாதனைகளை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த வருடத்தையும் அவர் இரண்டாம் இடத்துடன் முடித்திருக்கிறார். ரஷ்யா-யுக்ரைன் போரின் பின்னணியில்தான் கடந்த 12 மாதங்களின் பெரும்பகுதியில் இந்த பெலாரஸ் வீரர் விளையாட வேண்டியிருந்தது. ஒரு நடுநிலை விளையாட்டு வீரராக போட்டியிட வேண்டியதன் உணர்வுரீதியான சுமையையும் அவர் சுமக்க வேண்டியிருந்தது. ரைபாகினாவிடம் தோற்பதற்கு முன்பு அரையிறுதியை நோக்கிய விறுவிறுப்பான ஆட்டத்தை ஆடிய விக்டோரியா அசரென்காவுக்குப் பிறகு தனது நாட்டிலிருந்து களமிறங்கிய இரண்டாவது பெண் என்ற பெருமையைப் பெற்ற 24 வயதான ஆர்னா, இந்த பிரச்னைகள் எதுவும் அவரது சிறப்பான முயற்சிகளை தடம்புரள விடாமல் பார்த்துக் கொண்டு தனது முதல் பெரிய வெற்றியை ஈட்டினார். இதே போன்றவொரு ஆட்டத்தை தனது கடைசி ஸ்லாம் போட்டியில் வெளிப்படுத்திய சானியா மிர்சா மொத்த இந்தியாவையும் அதிர வைத்தார். ஆனால் அதற்கு பிறகு தனது ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களோடு இன்னொரு க்ராண்ட் ஸ்லாம் பட்டத்தைச் சேர்க்க அவரால் முடியவில்லை. ரோஹன் போபன்னாவுடனான கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் அவர் தோல்வியடைந்தார். ஆனால் அடுத்த மாதம் டபிள்யூ.டி.ஏ துபாய் 1000ல் ஓய்வு பெறவிருக்கும் 36 வயதான அவர், இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக, ஆட்டக்களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு தலைமுறைக்கு உத்வேகம் அளித்த அச்சமற்ற போட்டியாளராக திகழ்வார்.
This editorial has been translated from English, which can be read here.