பதினைந்து மாநிலங்களில் நடந்த சோதனைகளுக்கு பின்னர் செப்டம்பர் 22ஆம் தேதி தீவிர இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவைச் (பிஃஎப்ஐ) சேர்ந்த நூறு தலைவர்களையும் செயற்பாட்டாளர்களையும் கைதுசெய்தது தேசிய புலனாய்வு முகமை. பிஃஎப்ஐ தன்னை ஒரு ‘புதிய சமூக இயக்கமாக’ சொல்லிக் கொள்கிறது. ஆனால் அதன் முழக்கத்தையும் செயல்பாடுகளையும் பார்த்தால், அதன் உண்மையான இயல்பு என்ன என்பது குறித்து சந்தேகமே எழாத வகையில் இருக்கிறது. இந்த சோதனைகள் நடந்ததற்கு அடுத்த நாளில் கடையடைப்புக்கு அறைகூவல் விடுத்தபோது அது அந்த அமைப்பின் பண்பு குறித்த – வன்முறையும் மிரட்டுதலும் நிறைந்த – சமீபத்திய வெளிப்பாடாக அமைந்தது. பிஃஎப்ஐ தொடர்ச்சியாக அரசியல் சாசனம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை முன்னிறுத்துகிறது. ஆனால் இவையெதுவும் கடந்த வாரம் கேரளாவில் பிஎஃப்ஐ பேச்சிலும் செயலிலும் வெளிப்படுத்திய வன்முறையை மறைக்காது. கேரளா அந்த அமைப்பின் தொடக்கப் புள்ளியாகவும் தொட்டிலாகவும் இருந்த ஒரு மாநிலம். போராட்டங்களின் ஒரு பகுதியாக மிக மோசமாக வன்முறையைத் தூண்டக்கூடிய கோஷங்களும் உரைகளும் இருந்தன. பிஃஎப்ஐயும் அதன் அரசியல் முகமாக செயல்படும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவும் (எஸ்டிபிஐ) தங்களுக்கிடையிலான உறவை அவ்வப்போது மறுத்தே வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சட்டம் மற்றும் ஜனநாயகத்தின்பால் செயல்படுகிறார்கள் என்பது எந்த அளவுக்கு நம்பமுடியாத ஒன்றாக இருக்கிறதோ, அதே போல நம்ப முடியாத ஒரு கூற்றுதான் இதுவும். பல்வேறு மதங்களுக்கிடையில், குழுக்களுக்கிடையில் பகையுணர்வை ஊட்டும் சதியில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு பங்கம் உண்டாக்கி அதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டுவதுதான் பிஃஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளின் நோக்கம் என்று குற்றம் சாட்டியிருக்கிறது தேசிய புலனாய்வு முகமை. பிஃஎப்ஐ தொடர்பாக 19 வழக்குகளை பதிவு செய்திருக்கிறது அந்த அமைப்பு. 355 நபர்கள் மீது குற்றசாட்டை தாக்கல் செய்திருக்கிறது. அவற்றுள் 46 பேருக்கு தண்டனை உறுதியாகியிருக்கிறது. வன்முறைக்கு நியாயம் கற்பிக்க ஒரு மாற்று நீதி வழங்கும் முறையைப் பற்றிய பரப்புரையை மேற்கொள்வதாவும் அதன் மூலம் அல்-காய்தா போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் இணைய எளிதில் இலக்காகக் கூடிய இளைஞர்களை தூண்டி, இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர சதி செய்வதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
பிஃஎப்ஐ மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட இந்த சோதனைகளின்போது, தாக்குதல் மேற்கொள்ளப்பட வேண்டிய குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களின் பட்டியலை கைப்பற்றியிருப்பதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்திருக்கிறது. சட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்புகள் சொல்வதுபடி பார்த்தால், இளைஞர்களுக்கு வெடிகுண்டு மற்றும் ஆயுதப் பயிற்சி வழங்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாத முகாம் ஒன்றை ஏற்பாடு செய்த 2013ன் நரத் ஆயுதப் பயிற்சி வழக்கில் பிஃஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதிலிருந்து இது போன்ற சட்டவிரோத செயல்களில் இந்த அமைப்பு ஈடுபடுகிறது. 2020ல் தில்லியில் நடந்த கலவரங்களில் மக்களை தூண்டியதில் பங்காற்றினார்கள் என்று சொல்லப்பட்டு, சில பிஃஎப்ஐ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அதன் செயல்பாடுகளுக்காக நிதி வசூலில் ஈடுபடும் குற்றசாட்டும் பிஃஎப்ஐ மீது இருக்கிறது. இதன் காரணமாக பண மோசடி குறித்த அமலாக்கத்துறையின் விசாரணையயும் பிஃஎப்ஐ சந்திக்க நேரும். பிஃஎப்ஐ-எஸ்டிபிஐ வளர்ச்சியை, மிதவாத இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்தே வந்திருக்கின்றன. தீவிர இந்துத்துவத்தின் தாக்கம் மற்றும் அதற்கு துணை போகும் வகையில் பெரும்பான்மை அரசியலால் வழிநடத்தப்படும், பாரபட்சம் காட்டப்படும் அரசின் நடவடிக்கைகள் காரணமாக இஸ்லாமியர்களிடையே நிலவும் பாதுகாப்பின்மையிலிருந்தே இது போன்ற அமைப்புகள் ஆதாயம் பெறுகின்றன. அரசு எல்லாவிதமான தீவிரவாதங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக மத வெறுப்பின் மீது தேர்ந்தெடுத்த அணுகுமுறையை கைகொள்வது சரியில்லை.
This editorial has been translated from English, which can be read here.