ஞாயிறு அன்று இத்தாலியில் நடந்த நாடாளுமன்ற தேர்தல், அமைப்புக்கு எதிரான (anti - establishment) தீவிர வலதுசாரி சக்திகளை அதிகாரத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும் என்ற ஐரோப்பாவின் தீர்மானமான முடிவுக்கு முதல் பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பாலும் அதற்கு பதிலாக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளாலும் மோசமாக அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கும், கட்டுப்படுத்த முடியாத எரிவாயு விலைகளும் இடையில் இந்தத் தேர்தல் நடந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் ஜார்ஜியா மெலோனியின் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சி அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. ஐரோப்பிய கண்டத்தில் அரசு நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தியை பயன்படுத்திக்கொண்டு தீவிர வலதுசாரி சக்திகள் வளர்ந்து வரும் போக்கை உறுதிப்படுத்துவதாகவே இந்தத் தேர்தல் முடிவுகள் இருக்கின்றன. ஏப்ரலில் பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில், மெரைன் லெ பென் 41.5 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தார். அந்த நாட்டில் போருக்கு பின்னர் ஒரு வலதுசாரி பிரதிநிதி இவ்வளவு வாக்குகளை பெறுவது இதுவே முதன்முறை. இந்த மாத தொடக்கத்தில் ஸ்வீடனில் நடந்த பொதுத் தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மக்டலேனா அண்டர்சனின் அரசு வீழ்த்தப்பட்டதுடன், தீவிர வலதுசாரியான ஸ்வீடன் டெமாகிரட்ஸ் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இத்தாலியில் புதிய பாசிச பின்னணியைக் கொண்ட ஒரு கட்சி அடுத்து ஆட்சி அமைக்கப்போகிறது. 1945ல் பாசிச சர்வாதிகாரி பெனிட்டொ முசோலினியின் வீழ்ச்சிக்கு பின்னர் ஒரு மிக தீவிர வலதுசாரி நிர்வாகத்தை இப்போதுதான் இந்த அரசு பெற்றிருக்கிறது. பெரும்பான்மையான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சி இரண்டு நாடாளுமன்ற அவைகளிலும் மொத்தம் 26 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தார்கள். மெட்டியொ சால்வினியின் லீக் மற்றும் சில்வியோ பெர்லுசோனியின் ஃபோர்ஸா இத்தாலியா ஆகியவற்றை உள்ளடக்கிய திருமிகு.மெலோனியின் கூட்டணி மொத்தமாக 44 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது.
புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிரான, தீவிர தேசியவாத, பாதுகாப்புவாத கொள்கைகளை கொண்ட, ஐரோப்பா குறித்த சந்தேகங்களை கொண்டவர்களாகவே பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சி அறியப்பட்டிருக்கிறது. 2014ல் அந்தக் கட்சியின் தலைவராகப் பதவியேற்றிருந்த திருமிகு.மெலோனி, புதிய பாசிச பின்னணியைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி, ஜனரஞ்சகத்தன்மையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வடிவத்தை கைக்கொண்டார். பொருளாதார நலத்திட்டங்களுக்கும் சமூகரீதியில் மரபுசார்ந்தவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் அந்தப் போக்கு இருந்தது. தற்போது ஆட்சியிலிருந்து வெளியேறும் மரியோ திராகியின் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசுடன் இணைய வேண்டாம் என்கிற முடிவு அவரது கட்சியின் வாய்ப்புகளை அதிகப்படுத்தியது போலவே தெரிகிறது. இத்தாலியில் உள்ள இடதுசாரிகளில் துவங்கி வலதுசாரிகள் வரையிலான பெரும்பலான கட்சிகள் அனைத்தும் ஸ்திரத்தன்மை வேண்டும் என்பதால், தொழில்துறைக்கு ஆதரவான, ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான திரு.திராகியின் அரசை ஆதரித்த நிலையில், பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி முதன்மையான எதிர்க்கட்சியாக இருந்தார்கள். விலைவாசி உயர்வு மற்றும் உள்நாட்டு பிளவுகள் திராகியின் நிர்வாகத்தை பாதித்தபோது, அதன் பொருட்டு நாடு இன்னொரு தேர்தலை எதிர்கொண்ட போது, திருமிகு.மெலோனிதான் அதனால் அதிக லாபமடைந்தார். இத்தாலியின் பொருளாதார பிரச்னைகள், அவரது கூட்டணியில் உள்ள பிளவுகள், யுக்ரைன் உள்ளிட்ட வெளியுறவு கொள்கை தொடர்பான சிக்கல்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது எதிரில் இருக்கும் பாதை அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனால் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியின் வளர்ச்சி ஐரோப்பிய தலைநகரங்களில் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்ய வேண்டும். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்தநிலைக்குள் விழக்கூடும். குளிர்காலத்தில் எரிவாயு பிரச்னை இன்னும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, யுக்ரைன் போருக்கும் ஒரு முடிவு வருவதுபோலத் தெரியவில்லை. ஐரோப்பாவில் உள்ள அமைப்புக்கு ஆதரவான கட்சிகளும் அரசுகளும் அதிகரித்துவரும் பொருளதார சிக்கல்களை கட்டுக்குள் கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் அதிருப்தியையும் சரியாக கையாளவில்லை என்றால் தீவிர வலதுசாரி கட்சிகள் இந்த அரசியல் சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தொடரும்.
This editorial has been translated from English, which can be read here.