காலதாமதத்திற்கு பிறகு நடந்தாலும் இந்த வருட தொடக்கத்தில் சோமாலியாவில் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் அதிபர் தேர்தல்களுக்கு பிறகு அமைதியான ஆனால் நுணுக்கமான அதிகார மாற்றம், மோதல் நிறைந்த அந்த நாட்டில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு வழியாக சோமாலியா அரசியல் ஸ்திரதன்மையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை அது. ஆனால் கடந்த வெள்ளி அன்று தலைநகர் மொகதீஷுவிலுள்ள ஒரு உயர்தர ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் இருபது பேர் இறந்ததுபோனார்கள். இந்த குண்டு வெடிப்பு சோமாலியா சந்தித்துக்கொண்டிருக்கும் பாதுகாப்பு சவால்கள் பற்றிய ஒரு கவலைக்குரிய நினைவுறுத்தல் என்று சொல்லலாம்.
அதிபர் ஹசன் ஷெயிக் முகமதின் புதிய நிர்வாகம், தீவிரவாதிகளை கொள்கைரீதியாக, நிதிரீதியாக, ராணுவரீதியாக தோற்கடிப்போம் என்று வாக்களித்த பின்னரும் இது நடந்திருக்கிறது. ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் ஹோட்டலுக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்துக்கொண்டார்கள். 30 மணி நேரம் கழித்து பாதுகாப்பு அதிகாரிகள் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வந்ததாக அல்-ஷபாப் தெரிவித்தது. அல்-கொய்தாவுடன் இணைந்து செயல்படும் இந்த தீவிரவாத அமைப்பு, சோமாலியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. மேலும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக பொதுமக்களையும் பாதுகாப்பு அதிகாரிகளையும் குறிவைத்துத் தாக்கிவருகிறது.
சமீப வருடங்களில் சர்வதேச அளவில் தீவிரவாதத்தை முடக்கும் முயற்சிகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டாலும்கூட, சோமாலியாவில் நிலவும் மனிதநேய நெருக்கடி காரணமாகவும் அண்டை நாடுகளில் நிலவும் பாதுகாப்பு பிரச்னைகளாலும் அல்-ஷபாப் தொடர்ந்து வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2020ல் வெளிவந்த ஒரு அறிக்கையின் படி, அரசை விட அதிகமான வருவாயை அந்த அமைப்பு ஈட்டியிருக்கிறது, அந்த கண்டத்தில் மிக வலிமையான தீவிரவாத இயக்கத்தை கட்டமைத்திருக்கும் அந்த அமைப்பு, ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதி என வர்ணிக்கப்படும் வடகிழக்குப் பகுதியிலும் தனது ஆதிக்கத்தை பரவ செய்ய
முயற்சித்து வருகிறது. நெடுங்காலமாக, சோமாலியா செயல்படாத அல்லது நிலையற்ற அரசைக் கொண்ட ஒரு நாடாகவே அறியப்பட்டிருக்கிறது. சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் மிகப்பெரும் தோல்வியாகவும் இது பார்க்கப்படுகிறது. ஜெனரல் சியத் பார்ரேவின் சர்வாதிகார ஆட்சிக் காலத்திலிருந்துதான் சோமாலியாவின் உள்நாட்டு போர் தொடங்குகிறது. 1991இல் பார்ர்ரேவின் ஆட்சி வீழ்ந்தவுடன், நாடு குழப்பத்திலும் உள்நாட்டுப் போரிலும் சிக்கிக் கொண்டது. ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் ஒன்றோடு ஒன்று மோதத் தொடங்கின. அப்போதிலிருந்து சோமாலியாவில் ஸ்திரத்தன்மை வாய்ந்த ஒரு நிர்வாகத்தை உருவாக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உள்நாட்டு மற்றும் சர்வதேச முயற்சிகள் நடந்திருந்த போதிலும் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த குழப்பத்தில்தான் அல்-ஷபாப் உருவாகி இப்போதிருக்கும் நிலையை அடைந்திருக்கிறது.
அரசின் கட்டளைகள் தலைநகரைத் தாண்டி வேறு இடங்களில் எடுபடாது என்பது ஒரு பிரச்னை. ஒரு மிக மோசமான மனித நேய நெருக்கடியையும் கொடும் வறட்சியையும் நாடு எதிர்கொண்டிருக்கிறது. நாட்டின் நிர்வாக அமைப்புகள் இன்னமும் நிலையற்ற தன்மையில், சர்வதேச அளவில் நிதி அளிப்பவர்களை நம்பி இருக்கின்றன. இதனால், தங்களது அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளை தங்கள் வசமே வைத்திருப்பது தீவிரவாதிகளுக்கு எளிதாக இருக்கிறது.
சோமாலியாவின் துயரங்களுக்கு உடனடித் தீர்வுகள் ஏதும் இல்லை. ஆனால் மொகதீஷுவின் கூட்டாட்சி அரசும் அதன் உள்நாட்டு, சர்வதேச ஆதரவாளர்களும் இணைந்து ஒரு விரிவான பாதுகாப்பு மற்றும் நெருக்கடிக்கான எதிர்வினை அணுகுமுறையை உருவாக்குவது ஒரு தொடக்கமாக இருக்கும். அடிப்படை சேவைகள், பொருட்கள் மற்றும் நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதே நேரம், அரசியல்ரீதியாக பரந்துபட்ட ஒத்த கருத்தின் மூலம் திறன் வாய்ந்த பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். நிர்வாக கட்டமைப்பு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். அந்நாட்டின் பிழைத்திருப்பதற்கான இந்த போராட்டத்தில் சர்வதேச சமூகம் தாராளமாக சோமாலியாவின் பின்னால் திரண்டு நிற்க வேண்டும்.
This editorial in Tamil has been translated from English which can be read here.