செவ்வாய்க்கிழமை அன்று சென்னை அருகிலிலுள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த மாமல்லபுரத்தில் முடிவுக்கு வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் நல்ல காரணங்களுக்காக நிறைய நாட்கள் பேசப்படும். 2020ல் ரஷியாவில் நடக்க வேண்டிய போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப்போயின. பின்னர் ரஷ்யா யுக்ரைன் மீது தாக்குதல் நடத்திய நிலையில் சர்வதேச செஸ் நிர்வாக குழுவான ஃபிடே, இந்த பிரம்மாண்டமான, மதிப்புமிக்க போட்டிகளை நடத்த புதிய இடத்தை தேடத்தொடங்கியது. மார்ச் மாதத்தில்தான் சென்னையில் போட்டிகளை நடத்த முடிவுசெய்யப்பட்டது. 186 நாடுகளிலிருந்து 1,700 வீரர்கள் பங்கு பெரும் இந்த நிகழ்வு மிக குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டது என்பது நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் வருகை தந்த ஒலிம்பியாட்டின் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை தரக்கூடும். ஃபிடேவின் நிர்வாக இயக்குனராக இருக்கும் லாட்வியாவின் முன்னாள் பொருளாதார மற்றும் நிதி அமைச்சரும் புகழ்பெற்ற செஸ் விளையாட்டு வீரருமான டனா ரெயினிஸ்-ஒசாலா, முடிக்க முடியாத ஒன்றை முடித்துக் காட்டியதற்காக இந்தியாவை பாராட்டினார். அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பின் முன்மொழிவை தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றுக்கொண்ட பிறகு விஷயங்கள் வேகமாக நகர்ந்தன. கிரிக்கெட் அல்லது கால்பந்து போல கவர்ச்சிகரமாக இல்லாத ஒரு விளையாட்டுக்காக நூறு கோடி ரூபாயை செலவுசெய்ய தமிழ்நாடு அரசு முன்வந்தது முக்கியமான ஒரு விஷயம். 2013ல் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கும் மேக்னஸ் கார்ல்சனுக்கும் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. ஆனால் அதன் அளவிலும் சரி திட்டமிடுதல்களிலும் சரி, தற்போதைய ஒலிம்பியடோடு ஒப்பிடவே முடியாது.
ஒன்பது வருடங்கள் கழித்து, செஸ் ஆட்டம் மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டில் நடக்கும்போது ஆனந்த் ஒரு விளையாட்டு வீரராக அவ்வளவு பரபரப்பாக இல்லை. பதிலாக, வழிகாட்டுபவராக, பத்திகள் எழுதுபவராக, ஒலிம்பியாட் முடிவதற்கு முன்பு ஃபிடேவின் துணைத் தலைவராகதான் அவர் பரபரப்பாக இருந்தார். ஆனால் ஐந்து முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆனந்த், இந்திய செஸ்ஸில் ஒரு புரட்சியையே செய்துவிட்டார். இப்போது நடந்து முடிந்த ஒலிம்பியாடில் மூன்று குழுக்களை களமிறங்கச் செய்த புரட்சி அது. அதில் இரண்டு குழுக்கள் – திறந்த போட்டியில் இந்தியா 2 குழுவும் பெண்களுக்கான போட்டியில் இந்தியா 1 குழுவும் – வெண்கலப் பதக்கங்களை வென்று, சர்வதேச செஸ்ஸில் இந்தியா பலம் வாய்ந்த ஒரு சக்தி என்கிற பெயருக்கு நியாயம் செய்தது. ஏழு தனிப்பட்ட பதக்கங்களை வென்று ஒலிம்பியாடில் இதற்கு முந்தைய சாதனையை எட்டிப் பிடித்தது இந்தியா. பெரும்பாலான பதக்கங்களை தட்டிச் சென்றவர்கள் பதின் பருவ வயதினர். டி குகேஷ், நிஹல் சரின், ஆர். பிரக்யானந்தா, அர்ஜுன் எரிகைசி மற்றும் ரௌனக் சத்வனி போன்ற இளைஞர்கள் இந்திய செஸ்ஸின் பெரும் நம்பிக்கையாக இருக்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் பொது மக்களிடத்திலும் ஊடகங்களிடத்திலும் செஸ் மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்ததும், அந்த விளையாட்டுக்கு பெரிய அளவில் உதவும். ஆண்கள் பிரிவு நிகழ்வை உஸ்பெகிஸ்தான் வென்றது, ஆனால் செஸ் ஒலிம்பியாடின் மிகச் சிறந்த கதை உஸ்பெகிஸ்தானுடையதோ இந்தியாவுடையதோ இல்லை. போரால் பாதிக்கப்பட்ட யுக்ரையினிலிருந்து வந்திருந்த ஐந்து பெண்களைக் கொண்ட குழுவின் கதை அது. அவர்களது நாட்டில் நிலவும் சோகமான மனநிலையை அந்த தங்கம் கொஞ்சம் ஒளிரச் செய்யலாம். விளையாட்டின் வீழ்த்த இயலாத ஆன்ம பலத்தையும் அது பிரதிபலித்தது.
This editorial in Tamil has been translated from English which can be read here.