ஒரு நோயை தீர்ப்பதற்கான சிறப்பான முதல் படி, அது இருக்கிறது என்பதை அங்கீகரிப்பதுதான். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரவை சமீபத்தில் வெளியிட்ட தேசிய தற்கொலை தடுப்பு வியூகம் (National Suicide Prevention Strategy) அந்த விதத்தில் சரியாக பொருந்துகிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த நிலையில் இறுதியாக் பொதுவெளியில் இப்போது இருக்கும் இந்த வியூகம் நாட்டின் தற்கொலைகளின் பெரும் சுமையை நோக்கி கவனத்தை திருப்புகிறது. 2030க்குள் தற்கொலை இறப்பு விகிதத்தை 10 சதவிகிதம் வரை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியிருக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவின் மாறுபட்ட கள நிலைகளின் கடும் யதார்த்தங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு காலவரையறைக்குட்பட்ட செயல்திட்டத்துடன் அடி எடுத்து வைக்கிறது. இது உண்மையில் மிக மோசமான ஒரு பிரச்னை. இலக்கு குறிக்கப்பட்ட தலையீடுகளும் தொடர்புடைய களங்கங்களை குறைக்கும் உத்திகளும் இல்லாமல் போனால் மிகப் பெரிய அளவிலான ஒரு பொது சுகாதார நெருக்கடியை உருவாக்கிவிட கூடும். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி உலகளவில், 15-29 வயதினர்களிடையே, இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக தற்கொலை இருக்கிறது. அதே போல 15-19 வயதிலான பெண்களின் இறப்புக்கும் தற்கொலை இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் உயிர்களை தற்கொலைகளுக்கு இழக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில், தற்கொலை விகிதம் 1,00,000 மக்கள் தொகைக்கு 10.2 லிருந்து 11.3 ஆக உயர்ந்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தற்கொலைகள் மிக அதிக அளவில் (2018-2020) - 8 சதவிகிதம் முதல் 11 சதவிகிதம் வரை இருக்கின்றன. குடும்ப பிரச்னைகள் மற்றும் நோய்கள் மிகப் பொதுவான காரணங்கள். இது தவிர, திருமண உறவில் ஏற்படும் சண்டைகள், காதல் பிரச்னைகள், கடன் தொல்லை, போதைப் பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் அதன் மீதான சார்பு ஆகியவையும் தற்கொலைக்கான காரணங்களாக இருக்கின்றன. மேலும் 10 சதவிகித வழக்குகளிலாவது, தற்கொலைக்கான காரணம்
தெரியவில்லை. முக்கியமாக, பரவலாக நம்பப்படுவது போலல்லாமல் பெரும்பாலான தற்கொலைகளை தடுக்க முடியும் என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
தென்கிழக்கு ஆசிய பகுதிக்கான உலக சுகாதார அமைப்பின் வியூகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த வியூகமும் தற்கொலைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஆதாரங்களின் அடிப்படையிலான நடைமுறைகளை கொண்டுள்ளது. தவிர ஒருங்கிணைந்த வியூகத்தை வழங்குவதற்கு பலதுறை சார்ந்த ஒத்துழைப்புகளை ஒன்றிணைத்து, தற்கொலைகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தை அடைய முயற்சிக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பயனுள்ள கண்காணிப்பு முறைகளை நிறுவுவதற்கும், ஐந்து ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் மனநல வெளிநோயாளி பிரிவுகளை உருவாக்குவதற்கு இந்த வியூகம் உறுதி பூண்டிருக்கிறது. தவிர அடுத்த எட்டாண்டுகளில் கல்வி நிலையங்களில் பாடத்திட்டங்களில் மன நலனை சேர்க்கவும் எண்ணியிருக்கிறது. பூச்சிக்கொல்லிகளை வாங்க முடிவது மற்றும் குடிப்பழக்கம் உள்ளிட்ட இந்தியாவுடன் தொடர்புடைய பிரச்சினைகளை கையிலெடுத்திருப்பதன் மூலம், இலக்குகளை அடைவதற்கான பாதையில் இந்த வியூகம் செயல்படுகிறது. ஆனால் இலக்கை எட்டும் வரை இந்த போக்கை தொடர்வது அரசின் கடமை. கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு நாட்டில், எந்தவொரு செயலிலும் மாநில அரசுகளும் ஆர்வம் காட்டினால்தான் எந்த வெற்றியும் சாத்தியம் என்பதும் இருக்கிறது.
This editorial has been translated from English, which can be read here.