பத்து வருடங்களுக்கும் மேலான காலகட்டத்தில் ஒரு வளர்ந்த பொருளாதார நாட்டுடனான இந்தியாவின் முதல் மிகப்பெரிய தாராள வர்த்தக ஒப்பந்தமாக கருதப்படும் ஆஸ்திரேலியாவுடனான ஒப்பந்தத்தின் முதல் கட்டம் விரைவில் உறுதி செய்யப்பட்டு செயல்பாடுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய சேவைகளுக்கும் சரக்குகளுக்கும் எளிதாக சந்தைகள் கிடைக்கும். இதற்கு முன்பு இருந்த பிரதமரும் தற்போது எதிர்கட்சித் தலைவருமான ஸ்காட் மோரிசன் இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு ஒரு மாதம் கடந்திருந்த நிலையில், தற்போது பிரதமராக இருக்கும் அந்தோனி அல்பனீஸின் நிர்வாகம் நாடாளுமன்றம் மூலம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது கான்பெர்ராவில் இந்திய-ஆஸ்திரேலிய உறவுக்கு பரந்துபட்ட, இரு கட்சி ஆதரவும் இருக்கிறது. சீனாவின் “வர்த்தகத்தை ஆயுதமாக்குதல்” என்று ஆஸ்திரேலியா நம்பும் ஒரு போக்கினால் அந்த நாடு வருத்தமடைந்திருக்கும் நிலையில், அதுவே இந்தியா ஒரு நம்பத்தகுந்த பங்காளியாக இருக்கும் என்கிற உணர்வைத் திரட்ட உதவியது. இரு நாடுகளும் ஏற்கனவே நான்கு நாடுகள் கொண்ட குவாட், முத்தரப்பு வினியோக சங்கிலி மீட்கும் முன்முயற்சி மற்றும் இந்தோ-பசிபிக் பொருளாதார மன்றம் போன்ற சமீபத்தில் உருவாக்கப்பட்ட சர்வதேசக் குழுக்களின் ஒரு பகுதியாக உள்ளன. இந்த நிலையில், இந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம், ‘சீனா பிளஸ் ஒன்’ வியூகத்தை நோக்கிய, ஒரு நிலையற்ற வினியோக சங்கிலியிலிருந்து விலக நினைக்கும் உலகிற்கு, இந்தியாவின் நன்மைகள் பற்றிய ஒரு வலுவான சாதகமான சமிக்ஞையாக இருக்கிறது. இந்தியாவுடன் இதே போன்ற ஒப்பந்தங்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வரும் வர்த்தக பங்காளிகளில் சிலரும், இரு நாடுகளுக்கிடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளின் தன்மைகளை கவனித்து வருகிறார்கள். அதை வைத்து இன்னும் விரிவான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் தற்போதைய 31 பில்லியன்
டாலரில் இருந்து சுமார் 50 பில்லியன் டாலராக உயரும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. இந்த எழுச்சியில் பாதிக்கு இந்திய ஏற்றுமதிகள்தான் காரணம். அதிக தொழிலாளர்களை கோரும் துறைகளில் ஒரு மில்லியன் புதிய வேலைகளை அது உருவாக்கியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நாளிலிருந்து தொடங்கும் ஆஸ்திரேலிய சுங்க வரிகளில் 98.3% மீதான பூஜ்ஜிய வரி சலுகைகள், ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து இந்திய தயாரிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்கு பதில், ஆஸ்திரேலியா அதன் ஏற்றுமதிகளில் 90 சதவீதத்திற்கு (மதிப்பு அடிப்படையில்) இந்தியாவிடமிருந்து பூஜ்ஜிய வரி சலுகைகளை பெறும். நிலக்கரி, உலோகங்கள் மற்றும் கம்பளி போன்ற மூலப்பொருட்கள் அதன் ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்துவதால், இந்திய நிறுவனங்களுக்கு இன்னும் குறைந்த விலையுள்ள உள்ளீடுகள் கிடைக்கும் என்பது இதன் பொருள். இந்திய சமையல்காரர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்களுக்கான வருடாந்திர விசா ஒதுக்கீடுகள், மற்றும் இந்திய மாணவர்களுக்கான ஆய்வுக்குப் பிந்தைய வேலை விசா ஆகியவை உறவுகளை வலுப்படுத்தும். அதேபோல ஆஸ்திரேலியாவின் இரட்டை வரி விதிப்பை தவிர்க்கும் ஒப்பந்தம் காரணமாக, இந்திய ஐடி நிறுவனங்கள் வருடத்துக்கு மில்லியன் கணக்கான டாலரை சேமிக்கும் என்கிற நிலையும் உறவுகளை வலுப்படுத்த உதவும். இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், கனடா போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை நிறைவேற்றும் நிலையில் இருக்கும் இந்தியாவுக்கு, தொழிற்முறை அளவிலான உறவுக்கான பார்வையை முன் வைக்கும் ஆஸ்திரேலியாவுடனான ஒயின் இறக்குமதி உட்பிரிவுகள், பிற மதுவகைகளுக்குமான ஒரு முன்மாதிரியாக அமையும். ஆசியான் மற்றும் ஜப்பானுடனான இந்தியாவின் கடந்த கால ஒப்பந்தங்கள் காட்டுவதைப்போல வர்த்தக ஒப்பந்தங்கள் புதிய கதவுகளை திறக்கலாம் ஆனால் உடனடியாக அதிக ஏற்றுமதிகள் அல்லது இன்னும் சிறந்த வர்த்தக சமநிலைகளுக்கு இட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் ஒட்டுமொத்த சர்வதேச போட்டித் தன்மையை சரிசெய்வதற்கு குறுக்குவழியோ அல்லது மாற்று வழியோ இல்லை.
This editorial has been translated from English, which can be read here.