கர்நாடகாவின் மங்களூருவில் நவம்பர் 19ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு, இஸ்லாமியர்களுள் ஒரு பிரிவினரிடையே ஏற்பட்டு வரும் தீவிரமயமாதலின் நெருடும் அறிகுறி. குக்கர் வெடிகுண்டை ஆட்டோவில் எடுத்துச் சென்றதாக சொல்லப்படும் முகமது ஷாரிக் குறைந்தபட்சம் கருத்தியில் ரீதியிலாவது இஸ்லாமிய அரசுடன் இணைந்து இருக்கலாம் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். கர்நாடகாவில் குறைந்தது ஏழு இடங்களில் காவல்துறையினர் தேடுதலை நடத்தியிருக்கிறார்கள். அக்டோபர் 23ஆம் தேதி கோயம்புத்தூரில் தன்னுடைய சொந்த காரில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்த ஜமீஷா முபினுடன் ஷாரிக்கிற்கு ஏதும் தொடர்பு இருக்குமா என்பதையும் விசாரித்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பல இடங்களுக்கு ஷாரிக் பயணம் செய்திருக்கிறார். செப்டம்பர் 21ஆம் தேதி ஷிவமோகா மாவட்டத்தில் ஒரு குண்டை வைத்து சோதனையும் செய்து பார்த்திருக்கிறார் என்கிறது காவல்துறை. அவரது கூட்டாளிகள் இருவர் பிடிபட்ட நிலையில், காவல்துறையிடமிருந்து எப்படியோ தப்பியிருக்கிறார் ஷாரிக். பின்னர் மைசூருக்கு சென்று அங்கு தொடர்ந்து வெடிபொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்திருக்கும் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் மீண்டு வந்து மேலதிகத் தகவல்களை தருவார் என்று காவல்துறை எதிர்பார்க்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர், இன்னும் பல நபர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவர்களுக்கு கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் பங்கு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. முபினின் வீட்டிலிருந்து 75 கிலோ வெடிமருந்தை கண்டுபிடித்திருக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். இந்த இரண்டு சம்பவங்களின் உண்மையான திறன், நோக்கம் மற்றும் தொடர்புகள் ஆகியவை இன்னும் விசாரணைக்குரிய ஒரு விஷயமாகவே இருக்கின்றன. ஆனால் இதுவரை தெரிந்த தகவல்களே கவலைப்படுவதற்கு போதுமான காரணத்தை தந்திருக்கின்றன. மங்களூருவை உள்ளடக்கிய கடலோர கர்நாடகா சமீப வருடங்களாகவே போட்டி வகுப்புவாதத்தின் பிடியில் இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் இந்து, இஸ்லாமிய அமைப்புகள் இரண்டுமே தீவிரமடைந்திருக்கின்றன. ‘நாடு தழுவிய அளவில் தீவிரவாத நிகழ்வுகள் குறிப்பாக ஜிகாதி தீவிரவாதம் சமீப ஆண்டுகளில் குறைந்திருப்பதாக’ மத்திய அரசு சொல்லியிருக்கிறது. 2017ல் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் ஜிகாதி தீவிரவாதம் என்ற வகை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஜம்மு - கஷ்மீரிலும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களிலும் தீவிரவாத நிகழ்வுகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அரசு தரவுகள் சொல்கின்றன. சொல்லப் போனால் பிரச்னைக்குரிய பகுதிகளுக்கு வெளியே நாட்டின் எந்த பகுதியிலும் பல வருடங்களாகவே எந்தவொரு தீவிரவாத நிகழ்வும் நடக்கவில்லை. புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பும் செயல்திறனும் தீவிரவாத சம்பவங்களை தடுக்கலாம். ஆனால் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பராமரிப்பது அதைவிட பெரிய அரசியல்ரீதியான சவால். கோயம்புத்தூர் மற்றும் மங்களூரு குண்டு வெடிப்புகளுக்கு இடையிலான செயல்பாட்டு ரீதியான தொடர்புகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அதில் என்ன தெரிய வரும் என்பது தாண்டி, இந்த இரண்டு சம்பவங்களும் நாட்டின் அடிப்படையான பாதுகாப்பு சவால்களை சுட்டிக்காட்டுகின்றன என்கிற அளவில் ஒற்றுமையை கொண்டிருக்கின்றன. கோயம்புத்தூர் மற்றும் மங்களூரு குண்டுவெடிப்புகள் பற்றிய அரசியல் ரீதியிலான வெற்று கோஷங்கள் நல்லதைவிட அதிக தீங்கையே விளைவிக்கின்றன. உண்மை என்னவென்றால், இந்து பெரும்பான்மை அரசின் கீழ் தற்போது இருக்கும் இந்தியாவின் முன்பு ஒரு இஸ்லாமிய சவால் இருக்கிறது.
This editorial has been translated from English, which can be read here.