மூன்று வருடங்களாக உலகின் மிகக் கடுமையான தொற்று நோய் கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்ந்த பிறகு, சீனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பல நகரங்களில் தெருக்களில் இறங்கி ஊரடங்குகளையும் பூஜ்ஜிய கோவிட் கொள்கையையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிப் போராடினார்கள். செவிமடுப்பது ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்லது. 1989லிருந்து காணப்படாத அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடந்த இந்த போராட்டங்கள், காலாவதியாகிவிட்ட ஒரு கொள்கையின் மீதான மக்களின் களைப்பையே பிரதிபலிக்கின்றன. ஊரடங்குகள், வெகுஜன சோதனைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளின் ஒன்றிணைந்த வியூகம் காரணமாக வேறு எந்த நாட்டையும் விட மிக வேகமாக கோவிட் அலையிலிருந்து சீனா மீண்டது. உலகின் பிற பகுதிகளில் நடந்தது போல சீனாவில் அதிக மரணங்களும் நிகழவில்லை. இருப்பினும் அதிகம் பரவக்கூடிய ஆனால் மிதமான வைரஸ் உருவானதன் காரணமாக, இந்த அணுகுமுறை இப்போதெல்லாம் பலனளிப்பதில்லை. குறிப்பாக தடுப்பூசிகளால் வைரசுடனேயே கூட வாழலாம் என்கிற நிலை இப்போது பல நாடுகளில் உருவாகிவிட்டது. புதிய புதிய வைரஸ் வகைகளை எதிர்கொள்ள, சீனாவின் ஊரடங்குகள் இன்னும் கடுமையாக்கப்பட்டன. மார்ச் மாதத்தில், ஷாங்காயில் அமல்படுத்தப்பட்ட கொடூரமான ஊரடங்கின் காரணமாக உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டது. சீனாவின் மிகப்பெரிய நகரத்தில் மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்று நடந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் பூஜ்ஜிய கோவிட்டின் பொருளாதார மற்றும் சமூக செலவுகள் அதிகரிக்கும் நிலையில், ஊரடங்குகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற குரல் இளைஞர்களிடையே அதிகம் எதிரொலிப்பது, தலைமைக்கு கவலை தரக் கூடிய ஒரு விஷயமாக இருக்கும். போராட்டங்களுக்கான தூண்டுதலாக இருந்தது, உருக்மியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீவிபத்தில் பத்து பேர் உயிரழிந்ததுதான். ஊரடங்கு நடவடிக்கைகளின் காரணமாகவே அவசரகால உதவி மெதுவாக இருந்தது என்பதுதான் பரவலான கருத்து.
நாட்டை திறந்துவிட்டால் மக்கள் அதிகமாக இறக்க நேரிடும் என்று எச்சரித்து, பூஜ்ஜிய கோவிட் கொள்கைக்கு ஆதரவாக சீன தலைமை பேசியிருக்கிறது. ஆனால் அதற்கு காரணம், முதியவர்கள் மக்கள் தொகையில் பெரும் பகுதி இன்னும் தடுப்பூசி பெறாமல் இருப்பதுதான். ஊரடங்குகளை அமல்படுத்துவதில் சீனாவின் கணிசமான நிர்வாகத்திறனை பயன்படுத்துவதற்கு பதிலாக, அவசரமாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தடுப்பூசி போடும் நாடு தழுவிய முயற்சி தான் இப்போது வெகு காலமாக தேவையான ஒன்றாக இருக்கிறது. எம்.ஆர்.என்.ஏ ஷாட்களை விட குறைவான செயல்திறன் கொண்ட சீன தடுப்பூசிகளின் மூன்று டோஸ்கள் வயதானவர்களைப் பாதுகாக்க போதுமான அளவு வேலை செய்கின்றன என்பதை ஹாங்காங்கில் இருந்து வரும் தரவுகள் காட்டுகின்றன. சீனா தனது மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காட்டுகிறது என்பதுதான் பிரச்னை. இந்த மாத நிலவரப்படி, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 250 மில்லியனுக்கும் அதிகமான சீனர்களில் 68% பேர் மூன்று தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 30 மில்லியன் சீனர்களில் 40% பேர் மட்டுமே மூன்று டோஸ்களைப் பெற்றுள்ளனர். தனிப்பட்ட முறையில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை ஆதரித்து, பெருமளவில் மரணங்களை சந்தித்த மேலை நாடுகளுக்கான எதிர்வினையாக அதை அதிபர் ஷி முன்னிறுத்தியிருக்கும் நிலையில், இவ்வளவு பெரிய பாதிக்கப்படக் கூடிய மக்கள் தொகை இருக்கும் போது ஊரடங்குகளை எடுத்துவிட்டால் அது சீனாவின் சுகாதார பாதுகாப்பு முறையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்து, அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என்று அரசு பயப்படுகிறது. தடுப்பூசி வழங்குதலை முழுமையாக நிறைவு செய்து அதே நேரம் பூஜ்ஜிய கோவட் வியூகத்தை படிப்படியாக திரும்பப் பெறுவதுதான் ஒரே வழி போல தெரிகிறது.
This editorial has been translated from English, which can be read here.