தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் நடுநிலையான வழிமுறை வேண்டும் என்பதன் தேவை குறித்து தற்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாஸன அமர்வில் நடந்துகொண்டிருக்கும் வழக்கானது, தேர்தல் நடத்தும் அமைப்பின் செயல்பாட்டுச் சுதந்திரம் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியா குடியரசானதிலிருந்து சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்திவருவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு பொதுவாக நல்ல மரியாதை உண்டு. இருந்தபோதும், ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டப்படுவதும் உண்டு. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து இப்போது நீதிமன்றம் வெளிப்படையாகவே கவலை தெரிவித்திருக்கும் நிலையில், ஒரு சுயேச்சையான அமைப்பின் பரிந்துரையின் பேரில் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டுமா என்பதுதான் இப்போது கேட்கப்பட வேண்டிய கேள்வி. அம்மாதிரி செய்ய வேண்டுமென்றால், நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டுமென்கிறது பிரிவு 324 (2). அப்படி ஒரு சட்டம் இப்போதுவரை இயற்றப்படவில்லை. இந்தியத் தலைமை நீதிபதியை உள்ளடக்கிய ஒரு தேர்வுக் குழு போன்ற ஒரு சுயேச்சையான வழிமுறையின் மூலம் ஆணையர்களைத் தேர்வுசெய்யலாம் என விரும்புகிறது நீதிமன்றம். ஆனால், அரசு இந்தக் கருத்தைக் கடுமையாக எதிர்க்கிறது. இது தொடர்பான சட்டம் இல்லாததால், நீதிமன்றமே ஒரு வழிமுறையை வகுத்துவிடக்கூடிய சூழல் இருக்கிறது. இதனை தவிர்க்க விரும்புகிறது அரசு. ஒரு சுயேச்சையான அமைப்பு ஆணையர்களைத் தேர்வுசெய்தால், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மேம்படும். அந்த சுயேச்சையான அமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்பதை தானே சொல்வதா அல்லது நாடாளுமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிடுவதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.
தலைமைத் தேர்தல் ஆணையர்கள், இப்போது போலில்லாமல் முன்பெல்லாம் நீண்ட நாட்கள் பதவிவகித்தார்கள் என்பதை இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு தலைமை வகிக்கும் நீதிபதியான கே.எம். ஜோசப் சுட்டிக்காட்டியிருக்கிறார். 1993ல் இருந்து இந்தியத் தேர்தல் ஆணையமானது ஒரு தலைமை தேர்தல் ஆணையர், இரு தேர்தல் ஆணையர்கள் என பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாறியிருப்பதை நினைவில்கொள்ள வேண்டும். முதலில், தேர்தல் ஆணையர்களை நியமிக்கப்படுவார்கள். பிறகு மூப்பின் அடிப்படையில் அவர்களை தலைமைத் தேர்தல் ஆணையராகக்குவது என்ற வழிமுறை இப்போது கடைப்பிடிக்கப்படுகிறது. ஆகவே, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் வழிமுறையில்தான் ஆய்வும் கண்காணிப்பும் தேவைப்படுகிறது. ஏனென்றால், இங்குதான் ஒருவர் தன் விருப்பப்படி செயல்பட முடியும். தலைமைத் தேர்தல் ஆணையர்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். ஆனால், 65 வயதை அடைந்தவுடன் அவர்கள் ஓய்வுபெற்றுவிட வேண்டும். ஓய்வுபெறும் வயதுக்கு நெருக்கமாக, குறைந்த காலமே பதவி வகிக்கும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. தலைமை நீதிபதிகளும்தான் குறைந்த காலம் பதவி வகிக்க நேரிடுகிறது. அதனால், அவர்கள் சுதந்திரம் குறையவில்லையென வாதிடலாம். ஒருவர் தேர்தல் ஆணையத்தில் எவ்வளவு நாட்கள் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டுமே தவிர, அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர்களாக இருந்த நாட்களை மட்டும் கணக்கில்கொள்ளக்கூடாது என்கிறது அரசு. ஆனால், செயல்பாட்டுச் சுதந்திரமும் செயல்பாட்டு வெளியும், பதவிக்காலம் குறித்த பாதுகாப்புணர்விலிருந்துதான் வருகிறது என்பதுதான் இதில் உள்ள வித்தியாசம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவிக்கால பாதுகாப்பு இருக்கிறது. அவர்களை நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்துதான் நீக்க முடியும். அம்மாதிரியான பாதுகாப்பு தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கு மட்டுமே உண்டு. ஆனால், தேர்தல் ஆணையர்களை தலைமைத் தேர்தல் ஆணையர்களின் பரிந்துரையின்பேரில் நீக்கிவிட முடியும். தேர்வுமுறை எப்படியிருக்கிறது என்பதை ஒதுக்கிவிட்டு, தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கு உள்ள பாதுகாப்பை தேர்தல் ஆணையர்களுக்கும் அளிக்கலாம் என்பதும் ஒரு நல்ல வாதம்தான்.
This editorial has been translated from English, which can be read here.