ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழுவில் கட்சியிலிருந்து ‘வெளியேற்றப்பட்ட’ ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று சமீபத்தில் தற்காலி பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி கே பழனிச்சாமியை கிட்டத்தட்ட வலியுறுத்தி வெளியிட்டிருக்கும் ஒரு உத்தரவின் மூலம் அ.இ.அ.தி.மு.கவில் ‘இரட்டை தலைமையை’ மீண்டும் கொண்டு வந்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். பொதுக்குழுக் கூட்டம், அதை கூட்டவேண்டிய அதிகாரம் கொண்டவரால் கூட்டப்படவில்லை என்பதால் செல்லாது என்று நீதியரசர் ஜி. ஜெயசந்திரன் பிறப்பித்திருக்கும் உத்தரவு மேலோட்டமாக பார்த்தால்கூட நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு நடவடிக்கை. தலைமை பற்றி எந்த முடிவும் எடுக்கப்படாத முந்தைய பொதுக் குழு கூட்டம் நடந்த ஜுன் 23ஆம் தேதி இருந்த நடைமுறையே தொடர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இது கட்சியை ஒரு முடக்கத்தை நோக்கி தள்ளிவிடும் சூழலை உருவாக்கியிருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் (திரு. ஓ. பன்னீர்செல்வம்) மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் (திரு. கே. பழனிச்சாமி) ஆகியோரின் கூட்டு ஒப்புதல் இல்லாமல் எந்த பொதுக்குழுவும் செயற்குழுவும் கூடமுடியாது என்று நீதிமன்ற ஆணை திட்டவட்டமாக சொல்கிறது. இருவரும் இணைந்து பொதுக்குழுவை கூட்டி ‘ஒற்றை தலைமை’ உள்ளிட்ட எந்த முடிவையும் எடுப்பதில் தடை இல்லை என்றும் அந்த ஆணை சொல்கிறது. ஆனால் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஒற்றை தலைமை விவகாரத்தை பேசுவதை விரும்ப மாட்டார் என்கிறபோது அப்படியொரு நிலை உருவாவதற்கான வாய்ப்பு குறைவு. பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு கட்சியை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக நினைத்திருந்த திரு. பழனிச்சாமிக்கு இது ஒரு பின்னடைவு. கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு விலக்கப்பட்ட திரு. ஒ. பன்னீர்செல்வத்துக்கு கூட்டுத் தலைமையில் அவரது பங்கு மீண்டும் கிடைத்தது ஒரு மிகப்பெரிய சாதகமான அம்சம்.
நீதிமன்றத்தின் உத்திரவு மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது: இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்கிற நிலையில் தற்காலிக அவைத் தலைவர் ஜுலை 11ந் தேதி பொதுக் குழு நடத்த அழைப்பு விடுத்திருக்க முடியாது; 15 நாட்கள் முன்னறிவிப்பு இன்றி அந்த பொதுக் குழு நடத்தப்பட்டது; ஜூன் 23ஆம் தேதிக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டது என்ற கூற்றுக்கு அடிப்படையில்லை. ஒருவர் எடுக்கும் முடிவுக்கு தடைபோட அதிகாரம் கொண்ட இன்னொருவர் என்ற நிலையில், ஒத்துப் போகாத இரு தலைவர்களால் எப்படி கட்சியை நடத்த முடியும் என்பது விவாதத்திற்குரிய கேள்வி. ஒரு கட்டத்தில், பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்கும் பொதுக்குழுவின் அதிகாரத்தையும் நீதிமன்றம் கேள்விக்குட்படுத்தியதுபோல தோன்றியது. ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சி வெறும் 2,500 பொதுக் குழு உறுப்பினர்களை கொண்டு மாற்றத்தை கொண்டு வர முடியுமா என்றும் இந்த 2500 பேரும் உண்மையிலேயே கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும் என்றும் நீதிமன்றம் சொன்னது. நீதிமன்றம் சொன்ன இந்த கூற்றின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது தெளிவாக இல்லை, ஆனால் பொதுக்குழுவில் எடுத்த எந்தத் தீர்மானத்தையும் நிறுத்தி வைக்கவும் நிராகரிக்கவும் இது பயன்படலாம். அ.இ.அ.தி.மு.கவின் உட்கட்சி பிரச்னையை இந்த வழக்கு இன்னும் தீவிரமாக்கும் நிலையில், திரு. கே. பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். மோதும் இரு தரப்புகளில் ஒன்று வெகு நிச்சயமாக அதிகாரம் மிக்கதாக இருக்கும்போது ஒரு நீதிமன்ற உத்தரவால் அவர்களை ஒன்றிணைக்க முடியுமா என்பதுதான் இப்போது எழும் கேள்வி.
This editorial in Tamil has been translated from English which can be read here.
COMMents
SHARE