பல்வேறு அமைச்சரவைகளும் துறைகளும் வழங்கும் விருதுகள், பரிசுகள் மற்றும் நல்கைகளை ஒட்டுமொத்தமாக மீள்பார்வை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்த உத்தரவை அமலாக்கும் உள்துறை அமைச்சகம் அதன் எல்லைக்குள் வரும் வழக்கமான காவல்துறை அதிகாரிகளுக்கான விருதுகள் மற்றும் வீரதீர பதக்கங்களைத் தாண்டி, அறிவியல் மற்றும் மருத்துவ ஆய்வுலகிலும் அதிரடியாக உள்நுழைந்திருக்கிறது. இந்திய அறிவியலாளர்களுக்கு அவர்களது தொழில் சார்ந்து பல கட்டங்களில் வழங்கப்படும் விருதுகள் குறித்து இந்தியாவின் அறிவியல்துறை அமைச்சரவைகள் சமீபத்தில் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லாவுக்கு ஒரு விளக்கத்தை முன்வைத்தன. எவையெல்லாம் ‘தேசிய விருதுகள்’ மற்றும் எவையெல்லாம் தனியார் நன்கொடையிலிருந்து தரப்படுகின்றன என்பதையும் அவர்கள் பட்டியலிட வேண்டியிருந்தது. இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், முடிவெடுக்க தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் – இவற்றுள் செயலர்களும் அல்லது அமைச்சரவைகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் அடக்கம் – பெரும்பாலான விருதுகளை நிறுத்தி விடலாம் என்றும் ஒரு சில தேசிய விருதுகளை மட்டும் வைத்துக் கொள்ளலாம் அல்லது ஒன்றிரண்டு ‘உயர்தர’ விருதுகளை அமைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த குறைப்புகளுக்கு பின்னாலுள்ள காரணமாக திரு. பல்லா சொல்லியிருப்பது, “விருது பெறும் சூழலமைப்பை மாற்ற வேண்டும்” என்பது பற்றிய பிரதமர் நரேந்திர மோதியின் பார்வையை பின்பற்றுவதே. 2018ல் திரு.மோதி தனது அரசு பத்ம விருதுகள் வழங்கப்படும் முறையை சரி செய்திருப்பதாக சொன்னார். பிரபலமானவர்கள் திரும்ப திரும்ப அதை தட்டிச் செல்லும் வகையில் இல்லாமல், தன்னலமற்ற சேவை செய்யும் எளிய மனிதர்களுக்கு அது தரப்படும் வகையில் விருதளிக்கப்படும் முறையை மாற்றியிருப்பதாக அப்போது சொன்னார். விருதுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் ஒரு வெளிப்படையான தேர்வு முறை இருக்க வேண்டும் என்றும் திரு. பல்லா சொன்னார். விருதுகளும் பரிசுகளும் சாதனைகளுக்கான அங்கீகாரம். ஆனால் அறிவியல் மற்றும் மருத்துவ ஆய்வைப் பொறுத்தவரையில், அது இளம் வயதிலான அறிவியலாளர்களை பெரிதான, கற்பனைத்திறன் கொண்ட லட்சியங்களை நோக்கி செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. குறிப்பிட்ட சில அளவுகோல்களை வகுத்து அதன் அடிப்படையில் சாதனையாளார்களுக்கு தரப்படும் விளையாட்டு அல்லது வீர தீர விருதுகளைப் போலில்லாமல் அறிவியல் ஆய்வு என்பது அவ்வப்போது மாற்றங்களுக்கு உட்பட்டது, நேரடியாக இல்லாமல் சுற்றி வளைப்பது, பிறகு வரலாறு நமக்கு எடுத்துரைப்பது போல அவ்வபோது அதிர்ஷ்டம் தரும் வாய்ப்புகளாலும் செலுத்தப்படுவது. திறன் மிக்க இளைஞர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்காக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காக தயார் செய்வது சாத்தியம். ஆனால் ஒரு ஐன்ஸ்டினையோ, ஒரு சந்திரசேகரையோ அப்படி உருவாக்க முடியாது. இந்த புதிய யுகத்தில் நோபல் பரிசு பெற்ற பெரும்பாலானவர்கள் அவர்களது தொடக்க காலத்திலும் அதன் பிறகான பல வருடங்களிலும் இரண்டாம் கட்ட பரிசுகளையும் அங்கீகாரத்தையும்
பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். யார் விருது பெற்றவர்கள் மற்றும் யார் அதை தவற விட்டவர்கள் என்பது பற்றி நிறைய விவாதங்கள் எப்போதும் இருக்கின்றன. தொடக்ககால திறமையை கண்டறிவது என்பது எப்போதும் உள்ளுணர்வு சார்ந்தே இருக்கும். விருதுகள் குறைந்தால் அது மேலதிக அதிருப்தியை உண்டாக்கும். சொல்லப்போனால் விருதுகள் குறைந்தால் உண்மையான திறன்களை கண்டறிவதில் தடை ஏற்பட்டு ஏற்கனவே அங்கீகாரங்களை பெற்றவர்களுக்கே மீண்டும் விருது தரப்படும் சூழல் உண்டாகும். இது பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு நேரெதிரான விஷயமாகும். இந்த விருதுகளால் அமைச்சரவைகளுக்கு செலவுதான். ஆனால் செலவுக் குறைப்பை ஒரு காரணியாக முன்வைத்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. இந்தப் புதிய திட்டம் ஏற்கனவே உள்ள எந்த பிரச்னையைத் தீர்க்கும் என்பது தெளிவாக இல்லாத நிலையில், இந்தத் திட்டம் குறித்து மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.