மரண தண்டனை குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு உறுதியான பின்னர் தண்டனையளிப்பது சிக்கலான ஒரு விஷயம். மரண தண்டனை அளிப்பது மட்டும்தான் நீதியைப் பெற்றுத் தருமா அல்லது ஆயுள் தண்டனை போதுமானதா என்பதை விசாரணை நீதிபதிகள் முடிவு செய்ய அழைக்கப்படுவார்கள். ‘அரிதினும் அரிதான’ வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ஒரு நன்மை பயக்கும் நியமமாக முன் வைத்திருக்கிறது. ‘அரிதினும் அரிதான’ வழக்கு என்கிற வகைமையின் கீழ் ஒரு குற்றம் வருமா என்பதை முடிவு செய்ய குற்றத்தின் குரூரமான தன்மை மட்டுமே போதாது என்று தொடர்ச்சியாக பல தீர்ப்புகள் வலியுறுத்தியதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் இந்த நியமத்தை இன்னும் வலிமையாக்கின. அந்த வகையில், குற்றம் செய்தவர், அவரது சமூக-பொருளாதார பின்புலன் மற்றும் அவரது மனநிலையும் முக்கியமான காரணிகள். நடைமுறையில், வழக்கில் நீதிமன்றம் குற்றத்தை உறுதிசெய்த பிறகு தண்டனை விதிப்பு நடக்கும். பெரும்பாலும் அது தீர்ப்பு வழங்கப்பட்ட அதே நாளில் நடக்கும். குற்றவாளித் தரப்பில் ‘குறைக்கும் சூழல்களையும்’ அரசுத் தரப்பில் ‘மோசமாக்கும் சூழல்களையும்’ பற்றிய வரையறுக்கப்பட்ட வாதங்களும் மட்டும் அப்போது இருக்கும். தண்டனை பற்றிய விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு அர்த்தமுள்ள ஒரு வாய்ப்பை வழங்குவது தொடர்பான கேள்வியை, அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பியிருக்கும் மூன்று நபர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வின் சமீபத்திய தீர்ப்பு, தண்டனை விதிக்கும் முறைக்கு மானுடத்தன்மையை வழங்கும் ஒரு முக்கியமான நகர்வு. அதே-நாள் தண்டனை விதிப்பை உறுதி செய்யும் பல தீர்ப்புகள் இருக்கின்றன. உச்ச நீதிமன்றமும் குற்றத்தை குறைப்பதற்கான காரணிகளை முன்வைக்க, குற்றவாளிக்கு அர்த்தமுள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது எனவும், அதே நாள் மரண தண்டனையும் விதிக்கப்படுவது எந்த விதத்திலும் தண்டனையை மலினமாக்காது எனவும் அடிக்கடி சொல்லி வந்திருக்கிறது. சில உயர் நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு குற்றத்தை குறைப்பதற்கான காரணிகளை முன்வைக்க வாய்ப்பு வழங்குகின்றன. அதனால், விசாரணை நீதி மன்றங்களில் தண்டனை விதிப்பு முறையில் இருந்த போதாமைகள் பொருட்படுத்தக்கூடியவையாக இருக்காது. ஆனால் இப்போது சிறைத்துறை அதிகாரிகள், சோதனை அதிகாரிகள், பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்களிடமிருந்தும்கூட, மரண தண்டனை விதிக்காமல் இருக்கக்கூடிய வகையில் தண்டனை குறைப்பு
காரணிகளை ஆராய்ந்து அறிக்கை பெற வேண்டும் என்கிற பார்வையை நோக்கி நீதிமன்றங்கள் நகர்வது நிகழ்கால போக்காக இருக்கிறது. வேறொரு அமர்வுக்கு பிரச்னையை மாற்றும் அந்த உத்தரவில், வழக்கின் எந்த நிலையில் தண்டனைக் குறைப்புக்கான காரணிகளை முன் வைக்க வேண்டும் என்கிற கேள்வியையும் உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. தற்போது, தீர்ப்பு அளிக்கப்பட்ட பிறகே தண்டனைக் குறைப்புக்கான சூழல்களை முன்வைக்க வேண்டியிருப்பதால் நிலைமை குற்றவாளிகளுக்கு சாதகமானதாக இல்லை என்பதையும் அது குறிப்பிட்டு இருக்கிறது. இன்னொரு புறம் அரசுத் தரப்போ, வழக்கின் தொடக்கத்திலிருந்தே குற்றம் எவ்வளவு மோசமானதாக இருந்தது, குற்றம் சாட்டப்பட்டவர் அதிகபட்சமான தண்டனைக்குரியவர் என்பவற்றை முன் வைக்கிறது. தண்டனையை முடிவு செய்வதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் வளர்ந்த சூழல், கல்வி மற்றும் சமூக-பொருளாதார சூழல் போன்ற காரணிகள் குறித்து விசாரணை நீதிமன்றங்களே விரிவான புலனாய்வை மேற்கொள்ளக் கூடிய வகையில் அரசியல் சாசன அமர்வு புதிய வழிகாட்டுதல்களை கொண்டு வரலாம். சட்டப் புத்தகத்தில் மரண தண்டனை இருக்கும் வரையில் ஒருவரை தூக்கு மேடைக்கு அனுப்பவதில் உள்ள சட்ட மற்றும் தார்மீக ரீதியிலான தடுமாற்றம் உயிருடனேயே இருக்கும்.
This editorial has been translated from English, which can be read here.