காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோதோ யாத்திரா – இந்திய ஒற்றுமை பயணம் – ஒரு லட்சிய நோக்குள்ள அரசியல் பயணம். ஒரு தலைவராக ராகுல் காந்தி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறாரா என்பதை மட்டுமல்ல, நாட்டின் மனநிலையையும் அது கண்டறிய உதவும். இந்திய தீபகற்பத்தின் கடைகோடியில் உள்ள கன்னியாகுமரியில் புதன் கிழமை தொடங்கிய இந்த பயணம், ஐந்து மாதங்களில் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 3500 கிலோ மீட்டர் பயணமாக தொடர்ந்து முடிவில் காஷ்மீரை சென்றடையும். பன்முகத்தன்மையை தனது அடிப்படையாக வைத்திருக்கும் இந்திய தேசிய கொடியின் விழுமியங்களுக்குப் பின்னால் அனைத்து இந்தியர்களையும் திரட்டி ஒன்றுப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று திரு. ராகுல் காந்தி சொல்லியிருக்கிறார்.
தற்போதைய ஆட்சியாளர்களின் சித்தாந்தமான இந்துத்வம், இந்த விழுமியங்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதாக திரு ராகுல் காந்தி சொன்னார். இந்துத்துவத்தை கடுமையாக, தொடர்ச்சியாக விமர்சித்து வரும் திரு. ராகுல் காந்தி, பன்முகத்தன்மை, கூட்டாட்சி மற்றும் தாராளமயம் போன்றவற்றின் ஆதரவாளராகவும் இருக்கிறார். இருப்பினும், காங்கிரசுக்கு புத்துயிர் தரும் அவரது எண்ணத்துக்கு போதிய மக்கள் ஆதரவை திரட்ட அவரால் முடியவில்லை. இதற்கிடையில், நிலவியல் ரீதியாக ஆங்காங்கேதான் செல்வாக்குடன் இருக்கிறது என்றாலும் தில்லியில் அதிகாரத்தை கைப்பற்றும் அளவுக்கு இந்துத்துவம் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. அரசியல்ரீதியாக தீவிரமாக செயல்படவில்லை, தொடர்ச்சியான செயல்பாட்டில் அவருக்கு குறுகிய திறன்தான் இருக்கிறது போன்ற விமர்சனங்களை திரு. ராகுல் காந்தி சந்தித்திருக்கிறார். இப்படியொரு நீண்ட, சவால் நிறைந்த முயற்சிக்குள் நுழைவதன் மூலம், தனது நீடித்திருக்கும் திறனை அவர் சோதிக்கவும் செய்யலாம். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தொடங்கி எல்.கே.அத்வானி வரையில் இது போன்ற அரசியல் பயணங்கள் வரலாற்று ரீதியாகவும் சரி, சமீப காலங்களிலும் சரி, அரசியல் தலைவர்களின் எதிர்காலத்தை மாற்றி எழுதியிருக்கிறது. அதனால் தனது ஒவ்வொரு அடியிலும் திரு. ராகுல் காந்தி, அவரது ஆதரவாளர்களால், விமர்சகர்களால் குறிப்பாக அவர் மீது சந்தேகம் இருந்தாலும் திறந்த மனதுடன் இருப்பவர்களால் கூர்ந்து கவனிக்கப்படுவார்.
இந்திய மக்கள் தொகையில் இன்னும் முடிவெடுக்காத நிலையில் இருக்கும் மக்கள் அவரது பயணத்தை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறார்கள் என்பதுதான் திரு. ராகுல் காந்திக்கு முக்கியமான விஷயமாக இருக்கும். மே மாதம் உதய்பூரில் நடந்த விவாதத்துக்கான கூட்டத்தில்தான் காங்கிரஸ் இந்த பயணத்தை அறிவித்தது. கட்சியை மறுசீரமைக்க உதய்பூரில் அறிவிக்கப்பட்ட பிற நடவடிக்கைகளோடு இணைந்து இந்த பயணம் கூடுதலான பயனைத் தரும். இந்தியாவில் நடுநிலையாக இருக்கும் மக்களுக்கு ஒவ்வாத ஒரு விஷயம், காங்கிரஸ் கட்சியின் எளிய, திறமையான தொண்டர்களின் உழைப்பைப் பயன்படுத்தி, தொடர்ச்சியாக அதிகார மையங்களாக வாரிசுகள் வந்து கொண்டிருக்கும் போக்குதான். உதய்பூர் கூட்டத்தில் கட்சியில் பரம்பரை பரம்பரையாக அதிகாரத்தில் இருக்கும் நிலைகளின் போக்கு பற்றி கண்டறிவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது நடைமுறையில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. கட்சியை இப்படியொரு நிலையில் வைத்திருக்கும் இந்த நச்சுத்தன்மை வாய்ந்த மரபு பற்றி திரு. ராகுல் காந்திக்கு மிக நன்றாகவே தெரியும். பதிலுக்கு தன்னை பின்னுக்குத் தள்ளிக்கொண்டு முன்பு இருந்த ஒரு குழுவுக்கு பதிலாக தனக்கு ஆதரவான குழுவை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறையை திரு. ராகுல் காந்தி கையில் எடுத்திருக்கிறார். இந்த பயணத்தின் மூலம் திரு. ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டரை கண்டறியவும், உத்வேகமளிக்கவும், ஊக்கப்படுத்தவும் செய்ய வேண்டும். அரசு சாரா அமைப்புகளும் காங்கிரஸ் இயக்கத்துக்கு வெளியே இருப்பவர்களும் அவரது அரசியலுக்கு ஒரு எழுச்சியை தருவார்கள் என்கிற எண்ணம் தவறானது. தேசிய அளவிலான மாற்றத்தை வழிநடத்த தன்னால் முடியும் என்று பொதுமக்களை திரு. ராகுல் காந்தி நம்ப வைக்க வேண்டும். அதே நேரம், ஒருவர் பின் இன்னொருவராக அடிப்படை பலம் எதுவுமற்ற ஏமாற்றுக்காரர்களால் நசுக்கப்படும் கட்சியின் தொண்டர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். அது ஒரு நீண்ட பயணம் மட்டுமல்ல, தனிமையான பயணமும் கூட.
This editorial has been translated from English, which can be read here.