சுத்தமாக தெளிவுபடுத்த வேண்டும்

பயனர் தரவுகளில் எந்த சமரசமும் இல்லை என்று அரசும், டிவிட்டரும் பொது மக்களுக்கு உத்திரவாதம் தர வேண்டும்

August 29, 2022 12:55 pm | Updated 12:55 pm IST

இந்திய அரசு டிவிட்டர் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தி, அங்கு பணியில் அமர்த்திய ஒருவருக்கு ட்விட்டர் தளத்தின் பயனர் தரவு கிடைக்கப்பட்டதாக, ஊழலை அம்பலப்படுத்தும் களப்பணியாளர் ஒருவர் வெளிப்படுத்தியிருக்கும் செய்தி, இந்திய ஜனநாயகத்தின் நலன் மீது கொஞ்சமாவது அக்கறை கொண்ட யாரையும் கவலைக்குள்ளாக்க வேண்டும். குறைந்தபட்சம், அரசிடமிருந்தும், இன்றைய காலகட்டத்தில் மிகவும் வலிமை வாய்ந்த சமூக ஊடகமாக இருக்கும் டிவிட்டரிடமிருந்தும் இதற்கு அதிகாரப்பூர்வமான எதிர்வினையாவது வர வேண்டும். மாறாக, இப்போது அமைதியே நிலவுகிறது. ஆனால் சமீப வருடங்களில் இது போன்ற நிகழ்வுகள் எப்படி முடிந்திருக்கின்றன என்பதை பார்க்கும்போது இதொன்றும் அவ்வளவு ஆச்சரியம் தரவில்லை. இந்த தகவல் அமெரிக்க அரசு அமைப்புகளிடமும், அங்குள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமும் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும், கடந்த வாரம் சி.என்.என் மற்றும் தி வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கைகள் இதை பற்றி செய்தி வெளியிட்ட போதுதான் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. முறைகேடுகளுக்கு எதிராக செயல்பட்டுவரும் இணைய பாதுகாப்பு நிபுணரான பெயிட்டர் ‘முட்கே’ ஸட்கோதான் இந்தத் தகவலை அம்பலப்படுத்தியவர். டிவிட்டருக்கு ஜாக் டோர்சி தலைமை வகித்த போது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சார்ந்த சவால்களை எதிர்கொள்ள உதவுவதற்கு நவம்பர் 2020ல் கொண்டு வரப்பட்டார் ஸட்கோ. இந்த ஆண்டு தொடக்கத்தில் திரு. டோர்சிக்கு பின் வந்த பாரக் அகர்வால் ஸட்கோவை வேலையிலிருந்து நீக்கினார். அவர் அங்கு இருந்த குறுகிய காலத்தில், பாதுகாப்பு பிரச்னைகளை தீர்க்க டிவிட்டர் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும் என்பதைக் கண்டறிந்தார். அவர் வெளியிட்ட தகவல்களின்படி ‘மிகத் தீவிரமான, அதிர்ச்சியளிக்கக் கூடிய குறைபாடுகள் டிவிட்டரில்’ இருந்திருக்கின்றன. ஆனால் டிவிட்டர் வெளி உலகுக்கு சொன்ன செய்தி வேறு என்றும் அதன் மூலமாக பயனாளர்கள் மட்டுமின்றி முதலீட்டாளர்களையும், ஃபெடரல் ட்ரேட் கமிஷன் தொடங்கி எலான் மஸ்க் (அவர் தற்போது டிவிட்டரை வாங்கும் எண்ணத்தில் இருப்பது போல தெரியவில்லை) வரையில் எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறது.

இந்த ஒட்டுமொத்த பிரச்னையில் இந்தியக் கோணம் என்பது ஒரு சின்ன விஷயமாக இருக்கலாம். ஆனால் திரு. ஸட்கோ கருதுவதுபோல ‘அன்னிய உளவுத்துறை நிறுவனங்கள் டிவிட்டருக்குள் நுழையும் பல சம்பவங்களும், ஜனநாயக நிர்வாகத்துக்கான அச்சுறுத்தல்களில் அவற்றுக்கும் பங்கு இருந்திருக்க கூடும் என்பதும்’ உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்துக்கு கவலைக்குரிய ஒரு விஷயம்தான். அவர் வெளிப்படுத்திய தகவல்களில் இந்த பகுதியைப் பொறுத்தவரையில் பதில் சொல்லப்படாத கேள்விகள் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். “இந்திய அரசு குறிப்பிட்ட சில தனி நபரை (நபர்களை) பணிக்கு அமர்த்தச் சொல்லி டிவிட்டரை கட்டாயப்படுத்தியது; டிவிட்டரின் (கட்டமைப்பு ரீதியான தவறுகள் காரணமாக) முக்கியமான தரவுகளை அவர்கள் பெற்றிருக்கலாம்” என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. கடந்த வருடம் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் படி இந்தியாவில் இயங்கும் சமூக ஊடகங்கள் நியமிக்க வேண்டிய குறை தீர்க்கும் அதிகாரிகளைதான் அவர் சொல்கிறாரா என்பது தெளிவில்லை. இது ஒரு உதாரணம்தான். அதேபோல, இந்த நபர் தரவுகளை பெற்றிருந்தால் அதற்கு டிவிட்டரின் தவறுகளே காரணம் அன்றி வேறு எதுவும் இல்லை. அதனாலேயே இதில் தெளிவுபெறுதல் மிக முக்கியம். சமீபகாலங்களில் சமூக ஊடகங்களில் விமர்சகர்களை முடக்குவதில் அரசு தீவிரமாக இருப்பதாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும், திரு. ஸட்கோ அம்பலப்படுத்தியிருப்பதைப் போல எந்தவித தடையுமில்லாத பயனாளர் தரவுகளை பெறக்கூடிய வசதியும் பேச்சு சுதந்திரத்தை அழித்துவிடக் கூடும். தனி நபரின் பேச்சுரிமைக்கும் தனியுரிமைக்கும் சார்பாக நிற்பதாக அரசு எல்லோருக்கும் உறுதி தர வேண்டிய நேரமிது.

This editorial has been translated from English which can be read here.

Top News Today

Sign in to unlock member-only benefits!
  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products
Sign in

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.